டெல்லி: இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி துவங்கியுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனமான பிளிப்கார்ட், இணையதள விற்பனையில் இருந்து மொபைல் ஆப் சார்ந்த விற்பனை தளமாக மாறிவரும் நிலையில், அமேசான் இணையதள விற்பனையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் இடத்தை அமேசான் சில மாதங்களிலோ அல்லது வாரங்களிலோ பிடித்துவிடும் எனச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது.
வர்த்தக வித்தியாசம்..
பிளிப்கார்ட் நிறுவனம் மொபைல் சார்ந்த விற்பனையில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வந்ததால், இணையத் தளம் விற்பனை கணிசமான அளவில் குறைந்தது.
இக்காலகட்டத்தில் அமெரிக்க நிறுவனமான அமேசான், சுதந்திர தினம், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான தள்ளுபடி விற்பனையில், இந்நிறுவனத்தின் இணையதள விற்பனை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இணையாக உயர்ந்துள்ளது.
மொபைல் ஆப்
மேலும் மொபைல் ஆப் டவுன்லோடுகளில் கூட இரு நிறுவனங்கள் மத்தியில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.
பிளிப்கார்ட் ஆப் (செயலிகள்) 9 மில்லயன் வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்யதுள்ள நிலையில், அமேசான் ஆப்கள் 8.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை.
தரம்
இந்திய தர பட்டியலில் பிளிப்கார்ட் செயலி 10 இடங்கள் முன்னேறி முதல் தர வரிசையிலும், அமேசான் நிறுவன செயலி 16 இடங்கள் முன்னேறி 2வது தர வரிசையிலும் உள்ளது.
இதில் ஸ்னாப்டீல் நிறுவன செயலி 4வது தர வரிசையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள்
சந்தையில் உள்ள தகவல்களைப் பார்க்கும் போது இரு நிறுவனங்கள் மத்தியில் குறைந்த அளவிலான வர்த்தக வித்தியாசம் மட்டுமே உள்ள நிலையில் அமேசான் கூடிய விரைவில் பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும்.
முதலீடு
மேலும் அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.