திருப்பதி: மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, திருப்பதியில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் மொபைல் போன் உற்பத்தி மையத்தைத் துவங்க உள்ளது.
நரேந்திர மோடி
கடந்த வாரம் ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகரம் அடிக்கல் நாட்டு விழாவில் மொபைல் மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பிற நிறுவனங்கள்
இதே வளாகத்தில் லாவா மட்டுமின்றி, மைக்ரோமேக்ஸ், செல்கான் மற்றும் கார்பன் ஆகிய மொபைல் நிறுவனங்களும் தங்கள் உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 லட்சம் மொபைல் போன்கள்
2017 முதல் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. உற்பத்தி முழுமையாகத் தொடங்கிய பின் இந்த நிறுவனம், மாதத்திற்கு 50 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
500 கோடி ரூபாய் முதலீட்டு
அரசு ஒதுக்கிய 20 ஏக்கர் நிலத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் லாவா நிறுவனம் இந்த மையத்தை நிறுவ உள்ளது. இதன் மூலம் புதிதாக 12,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று லாவாவின், சர்வதேச முதன்மை உற்பத்தி அலுவலர், சஞ்சீவ் அகர்வால் தெரிவித்தார்.
லாவா நிறுவனம்
"அடுத்து வரும் சில ஆண்டுகளில், முழுமையான மொபைல் உற்பத்திச் சூழலை இந்தியாவிலேயே உருவாக்குவதும், இந்தியர்களுக்கு ஏற்ற மாதிரியான அம்சங்கள் கொண்ட போன்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றும் சஞ்சீவ் தெரிவித்தார்.
சீனா நிறுவனங்களின் தாக்கம்
ஆறு மாதங்களுக்கு முன்பு நோய்டாவில் தொடங்கப்பட்ட லாவாவின் உற்பத்தி மையம், மாதத்திற்கு 10 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. "இந்த மையத்தில் சீனத் தயாரிப்பு மொபைல் போன்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கும் வகையில் ஏற்கனவே உற்பத்திச் செலவை வெகுவாகக் குறைத்து விட்டோம். மேலும், எங்களுடைய நவீன உற்பத்திச் சாதனங்களின் மூலம் மலிவான சீனத் தயாரிப்புகளை விட 50 சதவீதம் அதிகத் தரமுள்ள மொபைல் போன்களைத் தயாரித்து வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.
மைல்கல்
இந்தப் புதிய உற்பத்தி மையம், லாவா நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருப்பதோடு இந்திய மக்களுக்குத் தரமான இந்தியத் தயாரிப்பு மொபைல் போன்களைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி, மக்களுக்குப் பயிற்சியும் வேலைவாய்ப்பும் அளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
1 மாதத்தில் 1.8 கோடி மொபைல்கள்
அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.2615 கோடி முதலீட்டில் இரண்டு உற்பத்தி மையங்களைத் தொடங்கப் போவதாகக் கடந்த ஜூலை மாதத்தில் லாவா நிறுவனம் அறிவித்திருந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்தால், லாவா நிறுவனம், ஒரு மாதத்திற்கு 1.8 கோடி மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் உற்பத்தி
சாம்சங் போன்ற உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் மற்றும் ஸ்பைஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது அசெம்ப்ளிங் மையங்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ்கான்
சமீபத்தில், சர்வதேச மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான ஜியோமி, ஜியோனி, ஆஸுஸ் ஆகிய நிறுவனங்கள், முதன்மை மின்னணு நிறுவனமான ஃபாக்ஸ்கான் உடன் இணைந்து ஆந்திரப் பிரதேசத்தில் அசெம்பிளி மையங்களைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
மிகப்பெரிய சந்தை
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும், பல 100 கோடி டாலர் வருமான வாய்ப்புள்ள இந்திய மொபைல் விற்பனைச் சந்தையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் கண்ணும் கருத்துமாகத் திட்டங்கள் தீட்டி வருகின்றன.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..