டெல்லி: மத்திய அரசின் நிதிநிலை மற்றும் நிதி பற்றாக்குறையைத் தீர்க்க பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.1.60 காசுகளும், டீசல் மீதான கலால் வரியை 40 பைசா என்ற அளவில் அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்புதிய விலை உயர்வு 7ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலாக்கம் செய்யப்படும்.
கலால் வரியின் உயர்வின் மூலம் பெட்ரோல் மீதான வரி அளவுகள் 5.46 ரூபாயில் இருந்து 7.06 ரூபாயாக உயர உள்ளது. இதேபோல் டீசல் மீதான வரி அளவுகள் 4.26 ரூபாயில் இருந்து 4.66 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் மாத காலத்தில் சுமார் 4 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை அளவு 7.75 ரூபாயும், டீசல் விலை 6.50 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வினால் மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய்க் கூடுதலாக நிதி திரட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.60 காசுகளும் மற்றும் டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு 40 காசுகளும் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.3,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.