டெல்லி: அமெரிக்காவின் முன்னணி ஏவியேஷன் நிறுவனமான போயிங், டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஏஹெச்-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கப் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
சமீபத்தில் இந்திய பாதுகாப்புத் துறை 37 ஹெலிகாப்டர்களைப் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது. இதனை முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப் போயிங் மற்றும் டாடா கூட்டணி முடிவு செய்துள்ளது.
கூட்டணி
இப்புதிய கூட்டணி முதலில் இந்தியாவில் ஏஹெச்-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் உற்பத்திக்கான தளத்தை அமைத்து, இதன் பின் தொடர் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் போயிங் நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது.
போயிங்
டாடா நிறுவனத்துடனான இந்தக் கூட்டணி இந்தியாவில் புதிய வாய்ப்புகளையும், வளர்ச்சிக்கான ஆதாயங்கள் மட்டும் அல்லாமல் பாதுகாப்புத் துறை சார்ந்த விற்பனையிலும் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது எனப் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியா விமானப் படையை வலிமைப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை 22 ஏஹெச்-64ஈ அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர் மற்றும் 15 சிஹெச்-47எப் சினூக்கி ஹெவி-லிப்ட் ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது. இரண்டும் போயிங் நிறுவனத்தின் புதிய மற்றும் அதிநவீன ஹெலிகாப்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக் இன் இந்தியா
இப்புதிய கூட்டணி நிறுவனம் இந்தியாவில் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டும் அல்லாமல் பயணிகள் விமானங்களையும் இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் ஏவியேஷன் துறை மற்றும் அதன் சார்ந்த பொருட்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்ட உள்ளது.
டாடா குழுமம்
மேலும் டாடா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான டாடா அட்வான்ஸ் மெட்டிரியல்ஸ் நீர்மூழ்கி கப்பலுக்கான உதிரி பாகங்களை மற்றும் உலோகங்களை அளிக்கிறது. அதேபோல் டால் உற்பத்தி நிறுவனம் போயிங் நிறுவனத்திற்கான உலோகங்களை அளிக்கிறது.