கொல்கத்தா: ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றித் தயாரிப்பான ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் இந்தியாவில் வெளியிட்டு 1 மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்நிறுவன தயாரிப்புகளுக்கு 34,000 ரூபாய் வரை சலுகையை அறிவித்து மொபைல் விற்பனை சந்தையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பைபேக் முறை..
இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் பைபேக் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி பழைய ஐபோன்களுக்குக் கொடுத்துவிட்டு புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் சுமார் 34,000 ரூபாய் வரை சலுகையை அறிவித்துள்ளது.
விற்பனை
இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவோர் அதிகளவில் புதிய ஐபோன்களை வாங்க முன்வருவார்கள். மேலும், இந்திய சந்தையில் விற்பனை அதிகரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர்
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 300 கோடி ரூபாய் விளம்பர செலவுகளில், ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் ரூ.62,000- ரூ.92,000 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது.
விழாக்காலம் என்பதாலும், கடந்த ஐபோன் வெளியீடுகளை விட அதிக விலை என்பதாலும் இந்நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் வரை குறைந்தது.
இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தின் இந்தப் பைபேக் ஆஃப்ர்களைத் தென் இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஒப்பந்த விற்பனையாளர்கள் முனையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்தச் சில வாரங்களில் இந்தச் சலுகை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விற்பனை முனையங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற மொபைல்கள்
மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது சக போட்டியாளரான சாம்சங் நிறுவன மொபைல்களுக்கும் பைபேக் முறையில் ஆஃபர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஈகாமர்ஸ் தளங்கள்
இந்தப் பைபேக் ஆஃபர்கள் மூலம் இந்தியாவில் ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் அமேசான் இணையத் தளங்கள் மூலம் புதிய ஐபோன் விற்பனை சுமார் 7-11 சதவீத உயர்வை அறிவித்துள்ளது.