துருக்கி: இந்திய மக்களுக்குச் சிறப்பான இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையை அளிக்க டிஜிட்டல் இன்பராஸ்டர்சரில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.
சுனில் மிட்டல் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவராக மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகக் கூட்டமைப்பின் (ICC) துணைத் தலைவராகவும் உள்ளார். துருக்கியில் நடைபெறும் ஜி20 நாடுகளின் வருடாந்திர மாநாட்டில் சுனில் மிட்டல் அவர்களும் கலந்துகொண்டார்.
ஜி20 மாநாடு
துருக்கியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக அந்நாட்டு நாட்டு அதிபர் Recep Tayyip Erdogan தனது பேச்சுறையுடன் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இண்டர்நெட் சேவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது எனச் சுனில் மிட்டல் கூறினார்.
ஒரு பாலம் தேவை
உலக மக்களுக்கு டிஜிட்டல் சேவையும், எளிமையான மற்றும் குறைவான கட்டணத்தில் தகவல் தொழில்நுட்ப சேவையும் அளித்திட உலக நாடுகள் மத்தியில் ஒரு பிரத்தியேக பாலம் வேண்டும் எனத் தெரிவித்தார்.
இன்றைய வாழ்க்கை முறையில் மக்கள் தங்களுக்கான உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தானாக உருவாக்கிக்கொள்ள இண்டர்நெட் மிகவும் அவசியமாக உள்ளது என்பதை அனைத்து நாடுகளும் புரிந்துகொண்டு, அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் சுனில் மிட்டல் தெரிவித்தார்.
மோடி
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும், அதன் விளைவுகளையும் முக்கியமானதாகக் குறிப்பிட்டார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
உலகப் பொருளாதார வளர்ச்சியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு சுமார் 95 சதவீதம். அதுமட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இத்தகைய நிறுவனங்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது.
இதனால் வளர்ந்து வரும் நாடுகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பெண்கள்
மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி மற்றும் உறுதியான நிலையைப் பெற்ற வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பணிகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வேலை இல்லாதோர் எண்ணிக்கை..
உலகளவில் வேலை இல்லாத இளைஞர்கள் அளவு 13% ஆக உள்ளது. இதைக் கூடிய விரைவில் உலக நாடுகள் களைய வேண்டும் எனத் தெரிவித்தார் மிட்டல்.
இந்தியாவில்..
மேலும் இந்தியாவில் சிறப்பான இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு சேவையை அளிக்க டிஜிட்டல் இன்பராஸ்டர்சர் பிரிவில் தனது நிறுவனம் தனிப்பட்ட கவனத்தையும், முதலீட்டையும் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
ஜி20 நாடுகள்
இம்மாநாட்டில் உலக நாடுகள் தலைவர்கள் மட்டும் அல்லாமல் பல வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.