சென்னை: இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நடந்து வரும் குழாய் அடி சண்டைக்கு நிகரான போட்டியில் பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஆளுமையைத் தொடர்ந்து அமேசானிடம் இழந்து வருகிறது.
அமெரிக்கச் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் முக்கியச் சந்தை இந்தியா தான். இதனால் வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களை வகுத்துள்ளோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இதனால் பிளிப்கார்ட் நிறுவன முதலீட்டாளர்கள் தற்போது அமேசான் நிறுவனத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.
பிளிப்கார்டுக்கு டேக்கா
இந்நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் தற்போது அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டு சுமார் 2.44 மில்லியன் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீதான முதலீடு அதிகளவில் குறையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
டைகர் குளோபல் மேனேஜ்மென்ட்
இந்நிறுவனம் இந்தியாவில் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக ஈகாமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில் தனது கவனத்தைச் செலுத்தி மிகப்பெரிய அளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது டைகர் குளோபல்.
இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் சீனா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருக்கும் முக்கிய நிறுவனங்களில் தனது முதலீட்டைச் செய்துள்ளது.
ஆஸ்தான முதலீட்டாளர்
பிளிப்கார்ட் நிறுவனத்தை ஆஸ்தான முதலீட்டாளரே வெளியேறிய நிலையில் பிற முதலீட்டாளர்களும் பிளிப்கார்ட் மீதான முதலீட்டில் இருந்து வெளியேறவில்லை என்றாலும் குறைத்துக்கொள்ள அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
இந்திய வர்த்தகம்
மேலும் இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு களமிறங்கிய அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையான வர்த்தகத்தை எட்டியுள்ளது.
இதிலும் இணையதள விற்பனையில் மிகவும் குறைவான அளவிலேயே வித்தியாசம் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் மொபைல் ஆ பதிவிறக்கம் மற்றும் வர்த்தகத்தில் சில நாட்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தை எட்டிவிடும் நிலையில் உள்ளது அமேசான்.
90 பில்லியன் டாலர்
சர்வதேச ஈகாரமஸ் சந்தையில் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமேசான் நிறுவனத்தின் கடந்த வாரம் சுமார் 2.44 மில்லியன் பங்குகளை டைகர் குளோபல் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சுமார் 3.19 மில்லியன் அமேசான் பங்குகளைத் தனது கஜானாவில் வைத்துள்ளது டைகர்.
மதிப்பீடு
டைகர் குளோபல் நிறுவனம் 3.19 மில்லியன் பங்குகளை 1.64 பில்லியன் டாலருக்கு கைப்பற்றினாலும் தற்போது இதன் மதிப்பு 2.1 பில்லியன் டாலராகும்.
28 சதவீத பங்குகள்
இன்றைய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டைகர் குளோபல் சுமார் 28 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
மேலும் நிறுவன துவக்கம் முதல் 3.2 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது பிளிப்கார்ட். இதில் 1 பில்லியன் டாலர் முதலீடு டைகர் குளோபல் செய்ததுள்ளது.
பிளிப்கார்ட்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் புதிய முதலீட்டாளர்களைத் தேட வேண்டுமா அல்லது டைகர் மீண்டும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.