மும்பை: ஆட்டோமொபைல் முதல் ஐடி துறை வரை அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கும் மஹிந்திரா குழும நிறுவனமும் தற்போது ஸ்டார்ப்- அப் கலாச்சாரத்தில் இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய ஐடியா மற்றும் திட்டங்களை வைத்துள்ள தனது நிறுவன ஊழியர்களையே ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அமைக்கவும், நிதியுதவி அளிக்கவும் மஹிந்திரா குழுமம் முடிவு செய்துள்ளது.
ஆனந்த மஹிந்திரா
இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பது மிகவும் இயல்பான நிகழ்வு தான். மேலும் நாங்கள் புதிய துறைகளில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளதால் புதிய துறை சார்ந்த நிறுவனங்களையும் ஆதரிக்கவும் தயாராக உள்ளோம் என மஹிந்திரா குமுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
கார்ப்பரேட் கராஜ்
மேலும் புதிய துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிக்கும் இத்திட்டத்தைக் கார்ப்பரேட் கராஜ் என்னும் அமைப்பின் கீழ் கவனிக்க முடிவு செய்துள்ளோம். இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குச் சிறப்பான சூழ்நிலையை உருவாக்கித் தரும் எனவும் ஆனந்த மஹிந்திரா தெரிவித்தார்.
புதிய நிறுவனம்
கார்ப்பரேட் கராஜ் கீழ் முதல் நிறுவனமாக ஸ்மார்ட்ஷிப்ட் என்னும் மொபைல் ஆப் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த ஆப் மூலம் கார்கோ நிறுவினவர்களைத் தங்களது வாகனங்களைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதேபோல் அடுத்ததாக விவசாயம் மற்றும் கார்களுக்கான சேவை அளிக்கும் இரு நிறுவனங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
ஒரு வருடம்
16.9 பில்லியன் மதிப்புள்ள மஹிந்திரா குழுமம் அடுத்த ஒரு வருடத்தில் 10-15 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக இக்குழுமத்தின் கொள்கைவகுப்பாளர் துறையின் தலைவர் அனிஷ் ஷா தெரிவித்தார்.
மஹிந்திரா நிறுவன ஊழியர்கள்
எங்கள் நிறுவனத்தின் உள்ள சில ஊழியர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மூலம் தொழில் முனைவோராக விருப்பம் தெரிவித்ததாகவும், அவர்களை நாங்களே நிதியுதவியுடன் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக நிறுவன ஊழியர்களிடம் இருந்து புதிய நிறுவனம் துவங்குவதற்காக 12க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இந்தியாவில் மஹிந்திரா மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆதித்தியா பிர்லா, ஆர்பிஜி குரூப், JSW குழுமம் போன்ற பல நிறுவனங்கள் புதிய ஐடியா மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க மிகப்பெரிய அளவில் நிதியை ஒதுக்கியுள்ளது.