பெங்களூரு: ஏற்கனவே டாலர் மற்றும் நாணய பரிமாற்றத்தால் அதிகளவிலான வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஹெச்-1பி விசா பெறுவதில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் 2 செனேட்டர்கள் ஹெச்-1பி விசாவை இனி ஊதிய அடிப்படையிலான அமைப்பில் மட்டுமே வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கான ஒப்புதல்களை நெல்சன் மற்றும் ஜெஃப் தலைமையிலான ஆலோசனை கூட்டம் அளித்துள்ளது நிலையில், தற்போது இந்த மனு அரசு பரிந்துரைக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய முறையிலான விசா வழங்கும் திட்டம் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
85,000 விசா
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு 65,000 பொதுவான ஹெச்-1பி விசாக்காளையும், 20,000 விசாக்களை அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினியரிங் மற்றும் கணித பட்டதாரிகளுக்கு அளித்து வருகிறது. ஆக மொத்தம் சுமார் 85,000 விசாக்களை அமெரிக்க அரசு உலக நாட்டு மக்களுக்கு அளித்து வருகிறது.
ஊதிய அடிப்படையில் விசா
தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனுவின் படி 85,000 விசாக்களில் முதல் 15,000 விசாக்களை அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 70,000 விசாக்களையும் அதிக ஊதிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனச் செனேட்டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
செக்..
இத்தகைய முறையின் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல், அவுட்சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை, அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்க முடியாது.
மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவார்கள் எனவும் இந்த மனு விவரிக்கிறது.
ஐடி நிறுவனங்களின் கதறல்
இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் தொழில்நுட்ப சந்தையை அதிகளவில் பாதிக்கும் என இந்திய ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
நாஸ்காம்
அதிலும் ஐடி நிறுவனங்களின் தொழிற்துறை அமைப்பான நாஸ்காம் கூறுகையில் இத்தகைய புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்கச் சந்தையில் நிலவும் அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினியரிங் மற்றும் கணித பட்டதாரிகளின் தட்டுப்பாடு அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
முற்றுப்புள்ளி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும். எப்படி..?
பொதுவாக இன்போசிஸ், டிசிஎஸ், போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் குறைவான சம்பளம் வாங்கும் இந்திய ஊழியர்களை, வெளிநாடுகளிலும் குறைவான சம்பளத்தில் பணியில் அமர்த்தி மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வந்தது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் அவுட்சோர்சிங்.
இந்தியா
இந்தியாவில் இதன் நிலையே வேறு.. இந்திய நிறுவனங்களில் சம்பளத்தை உயர்த்தினாலும் சரி.. உயர்த்தாவிட்டாலும் சரி, யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. இது தான் இந்தியா..!
நல்லது.. இந்தியர்களுக்கு
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களில் இனி, அமெரிக்கா செல்ல தகுதி உடைய ஊழியர்களுக்குச் சம்பளம் தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.