பெங்களூரு: உலக நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், இந்கியா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்த 10 முதல் 15 வருடத்தில் சீனாவிற்கு நிகரான பொருளாதார நாடாக உயரும் அளவிற்கு இந்தியாவிடம் திறன் உள்ளதாகச் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் கூறி வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு 9.8 சதவீதமாக உயர்ந்து 5 வருட வளர்ச்சியை அடைந்துள்ளது.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவு சுமார் 9.8 சதவீதமாக உயர்ந்து 5 வருட உயர்வை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் மாத விழாக் காலங்களால், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3.84 சதவீதத்தில் தொழில்துறை உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி -2.7 சதவீதமாக இருந்தது.
இந்தத் திடீர் வளர்ச்சியின் மூலம் நாட்டின் உற்பத்தித் துறை குறியீட்டின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாகும்.
இந்த வளர்ச்சி குறித்து மூத்த பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறுகையில், அக்டோபர் மாத வளர்ச்சி ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இது பல நன்மைகளைக் கொண்டு வரும். ஆனால் இது தீபாவளி பண்டிகையின் தாக்கத்தினால் வந்துள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்
தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (ஐஐபி) படி மின்சார உற்பத்தி 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சுரங்கத் தொழில் 4.7 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. இதை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.