டெல்லி: நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் -1.99% ஆக உயர்ந்த நிலையில் நுகர்வோர் விலை பணவீக்கம் மக்களை வாட்டி வதைக்கும் விதமாக 14 மாத உயர்வை எட்டி 5.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து தனது ரெப்போ விகிதத்தைக் குறைத்ததில் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை, இதனால் அடுத்த நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் அவசியம் இல்லை எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் விலை பணவீக்கம்
மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்தபடி நவம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்கத்தின் அளவு 5 சதவீதத்தில் இருந்து 5.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இதன் அளவு 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பணவீக்கம்
மொத்த விலை பணவீக்கத்தைப் போல், சில்லறை பணவீக்கத்திலும் உணவுப் பொருட்களின் கணிசமான தாக்கம் இருந்தது. நவம்பர் மாத முடிவில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலை நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், எண்ணெய் விதைகள் மற்றும் சர்க்கரையின் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதனால் சில்லறை பணவீக்கத்தின் உயர்வு அடுத்தக் காலாண்டு வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
இந்நிலையில் 13 மாதமாகப் பணவாட்ட நிலையில் இருந்த மொத்த விலை பணவீக்கம் கடந்த 3 மாதமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பருப்பு மற்றும் வெங்காயம் போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு -1.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் இதன் அளவு - 3.81 சதவீதமாக இருந்தது. 2014ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதன் அளவு -0.17 சதவீதமாக இருந்தது.
ஆர்பிஐ இலக்கு
ஜனவரி 2016ஆம் ஆண்டில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தின் அளவு 5.8 சதவீதமாக உயர ரிசர்வ் வங்கி இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. தற்போதைய நிலவரத்தில் ஜனவரி மாதத்தில் கண்டிப்பாக இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.