மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தலைமை வகிக்கும் டிரீம்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர்
இப்புதிய நிறுவனத்தின் பெயர் அம்பிலின் பார்ட்னர்ஸ். இக்கூட்டணி நிறுவனத்தில் ஈபே நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் ஸ்கோல் தலைமை வகிக்கும் Participant Media மற்றும் அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான EOne நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது.
அன்னிய முதலீடு தளர்வுகள்
சமீபத்தில் மத்திய அரசு 15 துறைகளில் புதிய அன்னிய முதலீட்டுத் தளர்வுகளை அறிவித்தது. இதில் முக்கியமாகச் செய்தி சேனல்களுக்கு 49 சதவீதம் அன்னிய முதலீடும், பொழுதுபோக்குச் சேனல்களில் 100 சதவீத அன்னிய முதலீடும் மத்திய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் குழுமம்
அம்பிலின் பார்ட்னர்ஸ் கூட்டணி நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது, அதேபோல் அம்பிலின் டெலிவிஷன் நிறுவனத்தின் மூலம் சிறப்பான நிகழ்ச்சிகளோடு நீண்ட கால வளர்ச்சி நோக்கில் செயல் பட உள்ளோம் என ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்
இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் கேமிங் தளங்களில் செயல்படும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தற்போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உடன் இணைந்து புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
அம்பிலின் பார்ட்னர்ஸ் கூட்டணி ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 300 மில்லியன் டாலர் பங்குகளைப் பெறும் எனவும் இக்கூட்டணியில் உள்ள 3 பங்குதாரர்கள் ஒன்றில் நான்கு சதவீத பங்குகளைப் பெற்றுக்கொள்வார்கள் என ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
உலகின் முன்னணி திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் அம்பிலின் பார்ட்னர்ஸ் கூட்டணியில் இணைந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை மீண்டும் துவங்க உள்ளார்.
7 வருடக் கூட்டணி
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்தை 7 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் துவங்கி இருந்தாலும், மிகப்பெரிய வெற்றி அடையவில்லை. இந்நிலையில் தற்போது புதிய கூட்டணியுடன் புதிய பெயருடன் மீண்டும் டிரீம்வொர்க்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அனில் அம்பானி
அம்பிலின் பார்ட்னர்ஸ் நிறுவன துவக்க நிகழ்ச்சியில் அனில் அம்பானி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உடனான 7 வருடக் கூட்டணி புதிய நிறுவனத்தின் மூலம் மேலும் தொடர மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.