டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய வாடிக்கையாளர் அதிகரிக்க மொபைல் கட்டணங்களில் 80 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இனி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்களுக்கான கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் அடுத்தச் சில மாதங்களில் இந்நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மறுசீரமைப்புத் திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், புதிய வாடிக்கையாளர்களின் சேவைக்கு முதல் 2 மாதத்திற்கு மொபைல் கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்க முடிவு செய்துள்ளோம் எனப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
குறிப்பாக நிமிடத்திற்கான ரேட் கட்டர் 36 ரூபாய்க்கும் நொடிகளுக்கான ரேட் கட்டர் 37 ரூபாய்க்கும் அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
36 ரூபாய் ரேட் கட்டரில் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு 1 நிமிடத்திற்கு 10 பைசாவும், அதேபோல் 37 ரூபாய் ரேட் கட்டரில் நிமிடத்திற்கு 30 பைசா வசூல் செய்யப் பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் 36 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் லோக்கல் மற்றும் எஸ்டிடி பிஎஸ்என்எல் நெட்வொர்க் கால்களுக்கு 3 நொடிகளுக்கு 1 பைசாவும், பிற நெட்வொர்க்களில் 3 நொடிகளுக்கு 2 பைசா வசூல் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிர்வாகம்.