பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையால் 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வரும் இந்நிறுவனம் முதலீட்டாளர்கள் பணத்தை மட்டும் நம்பி நிறுவனத்தையும் வர்த்தகத்தையும் நடத்தி வருவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகளவில் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக இந்நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களே பிளிப்கார்ட் நிறுவனப் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர்.
உணவு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரிசையில் பிளிப்கார்ட் நிறுவனமும் வரத் தயாராகி வருகிறது..!
ஏசல் பார்ட்னர்ஸ்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் முதலீட்டாளர் மற்றும் அதிகப் பங்குகள் வைத்துள்ள 2வது முதலீட்டு நிறுவனமான ஏசல் பார்ட்னர்ஸ், 100 மில்லியன் டாலர் மதிப்பிலான பிளிப்கார்ட் பங்குகளைக் கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இந்திய சந்தையில் ஈகாமர்ஸ் வர்த்தகம் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையாக உருவாகியுள்ளது.
விற்பனை
இந்தப் பங்கு விற்பனை நவம்பர் மாத இறுதியில் இரு நிறுவனங்கள் மத்தியில் உறுதி செய்யப்பட்டு, தற்போது 650 கோடி ரூபாய் அல்லது 100 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு பரிமாற்றம் நடந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
பிளிப்கார்ட் முதலீட்டாளர்கள்
ஏசல் பார்ட்னர்ஸ் முதலீட்டு நிறுவனத்தை விடப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்திருக்கும் நியூயார்க் முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் இதுவரை எவ்விதமான பங்கு விற்பனை நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் திசை முடிந்தது..
2016ஆம் ஆண்டில் முதல் பாதி முடிந்த பின் இந்தியாவில் இண்டர்நெட் நிறுவனங்களின் மதிப்பு நிலைபெற்றுள்ளது. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனங்கள் கணக்கில்லாமல் பெற்ற முதலீட்டுக்கு உரிய வளர்ச்சி இல்லாததால் பெரும்பாலான நிறுவனங்களின் மதிப்பு குறைந்து வருகிறது.
இதில் பிளிப்கார்ட், பேடிஎம், போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.
2,000 கோடி நஷ்டம்
ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் சந்தையில் அமேசான், ஸ்னாப்டீல் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிரிபுதிரியாகத் தள்ளுபடிகளை வாரி வழங்கியது. இதனால் பிளிப்கார்ட் சுமார் 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துத் தவித்து வருகிறது.
1 கோடி ரூபாய் சம்பளம்
2,000 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்திக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 23 ஊழியர்களுக்கு இந்நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை அளித்து வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் ஊழியர்களின் ஒரு சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்காகச் சுமார் 476 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது பிளிப்கார்ட்.
மறுப்பு
பங்கு விற்பனை குறித்த கேள்விகளுக்கு ஏசல் பார்ட்னர்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.
அலிபாபா
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அலிபாபாவின் ஆதிக்கம்..