மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கி, தனது, வங்கி இணையதளம் வாயிலாகத் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் ரயில்வே டிக்கெட்களை முன்பதிவு செய்யும் சேவையைத் துவங்கியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்காக ஒரு வங்கி (ஐசிஐசிஐ வங்கி) ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறை.
ஆன்லைன் டிஜிட்டல் வங்கி சேவை, பணப் பரிமாற்றம், மற்றும் பேமென்டு சேவைகளில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் ஐசிஐசிஐ வங்கி தற்போது ஒரு படி மேலாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் இந்திய ரயில்வே துறையின் ரயில் முன்பதிவு சேவையை அளிக்க உள்ளோம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இச்சேவையைப் பயன்படுத்த முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.) முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இணையவழி வங்கி வசதி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வகையில் இச்சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யவும், பிஎன்ஆர் குறித்த விபரங்களை அறியவும், ரயில்கள் குறித்து முழுமையான தகவல்கள் இந்த முன்பதிவு பக்கத்தில் உள்ளதாக ஐசிஐசிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.