டெல்லி: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் முழுமையான செயல் திட்டத்தை வருகிற ஜனவரி 16ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளது.
இத்திட்டத்தை மேலும் வலிமை சேர்க்கும் விதமாக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி குறித்த சந்தேகங்களைத் தீர்க்க தனி ஹெல்ப்-லைன் உருவாக்கியுள்ளது.
சுதந்திர தினம்
2015ஆம் ஆண்டுச் சுதந்திர தின விழாவில் பிரதமர் அளித்த செய்தி உரையில், இந்தியாவில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும், இந்நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை அளிக்க ஸ்டார்ட்-அப் இந்தியா என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைக்கத் துவங்கியது.
இத்திட்டத்தை அறிவிக்கும்போது மோடி ஸ்டார்ட்-அப் இந்தியா ஸ்டான்டு-அப் இந்தியா என்னும் புதிய முழக்கத்தையும் செய்தார்.
டாப் 5 நாடுகள்
ஸ்டார்ட்-அப் உலகில், இந்தியா சர்வதேச சந்தைகளுள் டாப் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது, இந்நிலையில் இத்துறையை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு ஜனவரி16ஆம் தேதி அறிவிக்கும் திட்டத்தில் பல வரிச் சலுகை மற்றும், அன்னிய முதலீட்டு அளவுகளில் தளர்வு ஆகியவை அறிவிக்கப்படலாம்.
வேலைவாய்ப்புகள்
இதுவரை இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் மட்டும் 80,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதில் பெரும் பங்கு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளது.
கொள்கை மாற்றம்
இந்தியாவில் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவன துவங்கவும், விரிவாக்கம் செய்யவும், முதலீடு பெறவும், வர்த்தகச் செயல்முறையை எளிமையாக்கவும் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை பிரத்தியேகமாகப் புதிய கொள்கைகளை வடிவமைத்துள்ளது.
கல்லூரிகள்
மேலும் இத்திட்டத்தில் இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், என்ஐடி போன்ற அனைத்துக் கல்லூரிகளும் இணைக்கப்படும் எனவும் மோடி அறிவித்தார்.
மோடி...
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியர்கள் அனைவரும் திறமை உண்டு. ஆனால் அந்தத் திறமையைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் நல்ல சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகள் அவர்களுக்கு அமைவதில்லை. இதனை உருவாக்கவே இந்த ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் எனவும் குறிப்பிட்டார்.
நிதியுதவி மற்றும் திட்டங்கள்
இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்தியா ஆஸ்பிரேஷன் ஃபண்ட் மற்றும் அட்டல் இன்னோவேஷன் மிஷன் ஆகிய இரு திட்டங்களை உருவாக்கியுள்ளது.