டெல்லி: சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சந்தையில் விலை நிலைகள் 11 வருடச் சரிவை சந்தித்துள்ளதால், இந்தியாவின் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் பெட்ரோநெட் நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டு முதல் பாதி விலைக்கு விற்பனை செய்யக் கத்தார் நாட்டு ராஸ்கேஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் பெட்ரோநெட் நிறுவனம் வருடத்திற்கு 4,000 கோடி ரூபாய் அளவிலான லாபம் பெற உள்ளது என எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.
பாதி விலை
இப்புதிய ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ள நிலையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் பெட்ரோநெட் நிறுவனத்திற்குக் கத்தார் நாட்டு ராஸ்கேஸ் நிறுவனம் ஒரு mmBtu எரிவாயுவை வெறும் 6-7 டாலருக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
12-13 டாலர்
இதற்கு முன் பெட்ரோநெட், ராஸ்கேஸ் நிறுவனத்திடம் இருந்து 12-13 டாலர் தொகைக்கு இறக்குமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.12,000 கோடி அபராதம்
மேலும் முந்தைய ஒப்பந்தத்தின் படி 2015ஆம் ஆண்டில் குறைவான அளவில் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்டதால் ராஸ்கேஸ் நிறுவனம் பெட்ரோநெட் நிறுவனத்தின் மீது 12,000 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது.
கூடுதலாக 1 மில்லியன் டன்
தற்போது நடந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கூடுதலாக 1 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை பெட்ரோநெட் இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதால் 12,000 கோடி ரூபாய் அபராதத்தையும் ராஸ்கேஸ் விலக்கிக்கொண்டது.
8.5 டன் இயற்கை எரிவாயு
இதன் படி ஏப்ரல் 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும் இப்புதிய ஒப்பந்தத்தில் 8.5 டன் இயற்கை எரிவாயுவை இறக்குமதியை செய்யப் பெட்ரோநெட் உறுதி அளித்து அதற்கான ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.