டெல்லி: இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருவதையும், அந்நிறுவனங்களைப் புனரமைப்புச் செய்வது பற்றியும் எண்ணற்ற செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றித் தெரியுமா? இதற்காகவே பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த முக்கியமான சட்டங்களில் ஒன்றாக இருப்பது, நொடித்துப் போயிருக்கும் தொழில்களை நிமிர்ந்து நிற்கச் செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவாகும்.
நிறுவனங்கள் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு வருவதில் தாமதம், வங்கிகளின் மேல் கடன் அழுத்தம் கொடுத்தல், அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகளைப் பெற முடியாமல் போய் விடுதல் போன்றவையே இந்த விஷயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சினைகளாகும். இத்தகைய பிரச்சனைகளைக் களையவே இப்புதிய மசோதா.
இன்று, நொடித்துப் போயிருக்கும் சில நிறுவனங்கள் தொழில் மற்றும் நிதி புனரமைப்பு வாரியத்தின் (Board of Industrial and Financial Reconstruction) உதவியைப் பெற்று புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் காத்துள்ளன. இது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நெடுநாட்களாக விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, இந்த நொடித்துப் போன நிறுவனங்களுக்குக் கடன் அளித்த நிறுவனங்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்தப் புதிய திவாலாகும் நிறுவனங்கள் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக வங்கிகளுக்கு நல்ல செய்தியாக இருக்கும். தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மிகவும் பழமையானவையாகவும் மற்றும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இல்லாமலும் உள்ளன.
பழைய அமைப்பு ரீதியாகத் தாமதத்தின் பலன்களை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்த வசதிகள் தொடரப் போவதில்லை என்ற நிலையைக் கொண்டு வருவதே இந்தச் சட்டம் வழங்கும் நல்ல செய்திகளில் ஒன்றாகும். இந்தப் புதிய திவாலாகும் நிறுவனங்களுக்கான சட்டம் தொழில் நிறுவனங்களுக்கும், கடன் வழங்குபவர்களுக்கும் என்னென்ன விஷயங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை மேற்கொண்டு படித்துத் தெரிந்து கொள்வோமா?
1) இது ஒரு நிறுவனம் திவாலாகி விட்டதை அறிவிக்கும் கால அளவைக் குறைந்திடும் மற்றும் விசாரணை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஓய்வு அளிக்கும்.
2) தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளைக் கவனிப்பதற்காக, வல்லுநர்களைக் குழுவின் உறுப்பினர்களாகச் சேர்ப்பதன் மூலம் முறைகேடுகள் நடப்பதையும் மற்றும் இதனை முன்மொழிந்தவர்களின் தேவையற்ற ஆதரவையும் தவிர்த்திடும்.
3) கடன் வழங்கியவர்களைப் பாதுகாப்பது இந்தச் சட்டத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக உள்ளது. இது கடன் வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிப்பதாக இருக்கும். குறிப்பாகத் தற்போது பெரும் கடன் சுமைகளில் தள்ளாடி வரும் மின்சாரம், சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமான துறையினருக்கு மிகவும் சிறந்த செய்தியாக உள்ளது. வங்கிகள் இந்தச் சட்டத்தின் மூலம் மிகவும் பயனடைகின்றன.
4) ஏற்கனவே பல்வேறு வழக்குகளின் சுமைகளுடன் இருக்கும் நீதிமன்றங்களின் சுமை மேலும் கூடாமல் தவிர்க்கும் பொருட்டாகக் கடன் வசூலிக்கும் தீர்ப்பாயங்கள் (Debt Recovery Tribunals) தொடங்கப்படும்.
5) பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான கால அளவு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் அது வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
6) கடன் பெற்றவர்கள் தொடர்பாகவும் மற்றும் எதிராகவும் நடைமுறையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கேட்கும் வகையில் நொடித்துப் போதலை நீதி விசாரணை செய்யும் ஆணையம் (Insolvency Adjudicating Authority) ஒன்றும் இருக்கும்.
7) திவாலாதல் தொடர்பான வழக்குகளை இந்தியாவில் முடிவுக்குக் கொண்டு வர சாதாரணமாக 4.3 ஆண்டுகள் ஆகிறது. இது 2 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
இந்தப் புதிய திவாலாகும் நிறுவனங்களுக்கான மசோதா என்பதிலும், திவாலாகி விட்டதை அறிவிக்கும் கால அளவையும் மற்றும் நிலுவைகளை வசூல் செய்வதன் கால அளவையும் குறைக்குமா என்பதில் பெரிய அளவில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை.. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டால், அந்தச் செய்தி நம்முடைய வங்கிகளின் காதில் தேனிசையாகப் பாய்ந்திடும் என்பதில் ஐயமில்லை!
எனினும், இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொருட்டாக அரசு தன்னுடைய ஆதரவை வழங்கவும் மற்றும் மசோதா கடந்து செல்லும் நிலைகளில் இரண்டு அவையினரையும் சமாதானம் செய்திடவும் வேண்டும். இந்த மசோதாவிற்கு அதிகளவில் எதிர்ப்புகள் எதுவும் இப்பொழுது இல்லை எனலாம். இந்த மசோதா சட்டமாக வேண்டுமானால், அது மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டையும் கடந்து வர வேண்டும்.
இப்போதைய நிலையில் அரசாங்கம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) மசோதாவின் மேலே முழுக் கவனத்தையும் வைத்துள்ளது. எனினும், பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் திவாலாகும் நிறுவனங்களுக்கான மசோதாவும் சட்டமாகி விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.