டெல்லி: 2016ஆம் ஆண்டின் முதல் நற்செய்தியாக, நடப்பு ஆண்டில் இந்தியாவில் புதியதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அதேபோல் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இவ்வருடம் சுமார் 10 முதல் 30 சதவீதம் வரையும் சம்பள உயர்வு அளிக்கப்படும் என மனிதவளத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
2015ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு துறைக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது இதேபோல் 2016ஆம் ஆண்டும் மிகச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான சூழ்நிலை
இந்தியாவில் தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு துறைக்கும் சாதகமான பொருளாதாரச் சூழ்நிலை, தொழில் நுட்பம், சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கம் ஆகியவை அமைந்துள்ளதால் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் புதிய 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என ``மை ஹைரிங் கிளம் டாட் காம்" மற்றும் ``ஜாப் போர்டல் டாட் காம்" நிறுவனத்தின் சீஇஓ ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
அன்னிய நிறுவனங்களின் வருகை
இதுமட்டும் அல்லாமல் மேன் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் உற்பத்தித் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் நிலையில், இதில் அந்நிய நிறுவனங்களின் பங்கு சரி பாதியாகவும், சில நிறுவனங்களில் அதிகமாகவும் உள்ள நிலையில் ஊழியர்களின் சராசரி சம்பளத்தின் அளவுகள் அதிகரிக்கும்.
அன்னிய முதலீடு
மேலும் நாட்டில் பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவை இரட்டை இலக்கத்தில் இந்த வருடம் இருக்கும் என இவ்வருட கணிப்புத் தெரிவிக்கிறது.
புதிய வேலைவாய்ப்பு
மை ஹைரிங் கிளம் டாட் காம் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டில் அதிகப் பணியாளர்களை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
முக்கியமான 12 துறைகளில் இருந்து 21 நகரங்களைச் சேர்ந்த 5,480 நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1,614 நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் பணியாளர்களை எடுக்கும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அரசு திட்டங்கள்
2016 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவும், இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி காரணமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று டைம்ஸ் ஜாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு
நடப்பு நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்துவதால் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இருக்கும். இதன் காரணமாகத் தனியார் துறையிலும் அதிகச் சம்பள உயர்வு கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
சராசரியாக 12 முதல் 14 சதவீதம் வரை சம்பள உயர்வும் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 25-30 சதவீதம் சம்பள உயர்வும் இருக்கக் கூடும் எனக் குளோபல் ஹண்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
முக்கியத் துறைகள்
இந்நிலையில் ஐடி துறையில் 2.7 லட்சம், இ-காமர்ஸ் துறையில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிஜிட்டல் மார்கெட்டிங் பிரிவில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளும், வங்கி மற்றும் நிதிச் சார்ந்த பிரிவுகளில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
சில்லறை வர்த்தகம் மற்றும் ஆட்டோமொபைல் துறையிலும் கணிசமாக வேலை வாய்ப்புகள் உருவாகும்.