டெல்லி: தொலைத்தொடர்பு சேவைகளில் செய்யப்படும் மோசடிகளில் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி அளவிற்கு வருமானம் பெறுவதைத் தடுக்கும் வகையில் டிராய் அமைப்பு, இனி வாடிக்கையாளர் சந்திக்கும் கால் டிராப் பிரச்சினைக்குக் கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
கால் டிராப் என்றால் என்ன..?
மொபைல் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது தொழில்நுட்ப காரணங்களால் அழைப்பு தடைப்படுவது தான் கால் டிராப். இது இயல்பாக நடந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை, தொலைத்தொடர் நிறுவனங்கள் அதிகப் பணம் வசூல் செய்ய வேண்டுமென்ற இணைப்பைத் துண்டிக்கிறது.
இத்தகைய மோசடியைத் தடுக்கவே டிராய், கால் டிராப் பிரச்சனையைச் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இனி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஒரு டிராபிற்கு ஒரு ரூபாய்
டிராய் அமைப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவில் அழைப்பு அல்லது இணைப்புத் தடைப்படும் ஒரு நிகழ்வுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உச்சவரம்பாக ஒரு நாளுக்கு மூன்று ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு
டிராய் அமைப்பின் இப்புதிய விதிமுறைக்கு எதிராகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
நீதிமன்றம் முடிவெடுத்துத் தீர்ப்பு வழங்கும் போது, நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம் என்று இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர் சங்கம் தெரிவித்துள்ளது.
டிராய்
வழக்கு குறித்து டிராய் அமைப்புக் கூறுகையில் புதிய உத்தரவிற்கு எதிராகத் தொலைத்தொடர்பு அமைப்பு தொடுத்த வழக்கு வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று டிராய் அமைப்பு அறிவித்துள்ளது.
100 சதவீதம்
இணைப்புத் தடைப்படாமல் 100 சதவீதம் சேவை வழங்குவது என்பது நிஜத்தில் சாத்தியம் இல்லை என்று ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டிராய் அமைப்பின் உத்தரவின் படி அபராதம் செலுத்தப்பட்டால் நாங்கள் 1,000 முதல் 1,500 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும்.
பிரச்சனைக்குத் தீர்வு..
இந்திய தொலைத்தொடர்பு சேவையில் கால் டிராப் பிரச்சனையைத் தீர்க்கவே இத்துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட டெலிகாம் டவர்களை நிறுவினர்.
பங்குச்சந்தை
டிராய் அமைப்பின் இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.