டெல்லி: இந்தியாவில் இருந்து காபூல் செல்லும் ஒரே தனியார் விமான நிறுவனம் என்றால் அது ஸ்பைஸ்ஜெட் தான். ஏற்கனவே வாரத்திற்கு 3 முறை பயணிகள் விமானச் சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் (Spicejet), பிப்ரவரி 8ஆம் தேதி முதல், வாரத்திற்கு 5 முறை எனத் தனது விமானச் சேவையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் தவிர இந்தியாவில் இருந்து காபூல் நகரத்திற்கு விமானச் சேவை அளிக்கும் மற்றொரு நிறுவனம் ஏர் இந்தியா.
ஸ்பைஸ்ஜெட்
பிரதமர் மோடி வெற்றிகரமாகத் தனது ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துள்ள இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இப்புதிய முடிவுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும், இரு நாடுகளுக்கு மத்தியிலான இந்த நட்புறவில் இத்தகைய சேவைகள் வலிமை அடையும்.
குளிர்காலச் சேவைகள்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குளிர்காலச் சேவைகளுக்காகத் தினசரி விமானச் சேவைகளில் சென்னை-கொச்சி, பெங்களூரு-விஜயவாடா, கொச்சி-சென்னை, ஹைதராபாத்- விஜயவாடா ஆகிய வழித்திடங்களில் கூடுதலாக 10 விமானங்களை இணைத்துள்ளது.
விமானங்கள்
இக்காலகட்டத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதைக் கணித்துள்ள ஸ்பைஸ்ஜெட் 78 இருக்கைகள் கொண்ட பாம்ஏர்டையர் Q400 ரக விமானத்திற்குப் பதிலாக, 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737 ரக விமானங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
தள்ளுபடிகள்
மேலும் அடுத்தச் சில மாதங்களில் கோடைக்கால விடுமுறைகள் வருவதால், புதிய தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை வடிவமைக்கும் பணியில் ஸ்பைஸ்ஜெட் இறங்கியுள்ளது.
விரிவாக்கம்
ஒரு வருடத்திற்கு முன் நிதிப் பற்றாக்குறையால் நிறுவனத்தை நடத்தவே தவித்து வந்த ஸ்பைஸ்ஜெட், தற்போது நிறுவன விரிவாக்கத்திற்காக 150 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்பைஸ்ஜெட், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சிறந்த நிறுவனம்
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச விமான நிறுவனப் பங்குகளில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது.
பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங் தலைமையில் கடந்த ஒரு வருடமாக ஏவியேஷன் துறையிலேயே மிகவும் சிறந்து விளங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 295.64 ரூபாய் அளித்துள்ளது.
சஞ்சீவ் கபூர்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பிளாஷ் சேல் என்ற தள்ளுபடி விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற தலைமை செயல் ஆதிகாரி சஞ்சீவ் கபூர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சஞ்சீவ் கபூர் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார்.