மும்பை: நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளரின் நம்பிக்கையை, வலுப்படுத்தும் விதமாகப் பின்னி பன்சால் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீஇஓ-வாக இருந்த சச்சின் பன்சால் தற்போது நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளிப்கார்ட்
15 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் அமேசான் நிறுவனத்தின் வருகையாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்னாப்டீல் ஆதிக்கத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.
இந்நிலையில் நிர்வாகக் குழுவில் செய்த புதிய மாற்றத்தின் மூலம் இனி பிளிப்கார்ட் புதிய வடிவமைப்பில் உருவாகும் எனத் தெரிகிறது.
தலைமை மாற்றம்...
இந்நிறுவனத்தின் சீஇஓவாக இருந்த சச்சின் பன்சால் தற்போது நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இனி சிஇஓ பதவியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ-வான பின்னி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முகேஷ் பன்சால்
இந்நிலையில் ஆன்லைன் ஆடை விற்பனை தளமான மின்திரா நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனம் கைபற்றிய பின் இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால் பிளிப்கார்டின் காமர்ஸ் பிளாட்பார்ம் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாக மாற்றங்களில் இனி முகேஷ் பன்சால் கூடுதலாக விளம்பர வர்த்தகத்திற்குத் தலைமை வகிப்பார் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
பின்னி பன்சால்
பின்னி சீஇஓவாக நியமிக்கப்பட்ட நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்திற்கும் செயல்பாட்டிற்கும் முழுப் பொறுப்பு பின்னி பன்சால் தான்.
புதிய பொறுப்புகள்
இனி காமர்ஸ், ஈகார்ட், மின்திரா பிரிவுகளை நேரடியாகக் கவனிக்க உள்ளார். அதுமட்டும் அல்லாமல் கார்பரேட் செயல்பாடுகள், மனிதவள பிரிவு, நிதியியல், சட்டம், கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் கார்பரேட் வளர்ச்சி ஆகியவற்றையும் கூடுதலாகக் கவனிக்க உள்ளார் பின்னி பன்சால்.
அமேசான் வருகை
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வருகையில் மிகப்பெரிய தாக்கத்தைப் பிளிப்கார்ட் சந்திக்கவில்லை என்றாலும், கடந்த சில வருடங்களில் நாட்டின் முக்கியப் பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை ஓரம் கட்டி அமேசான் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் பெரு நகரங்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஸ்னாப்டீல்
அதேபோல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் வர்த்தகம் ஆதிக்கம் செலுத்துவதால், இத்தகைய சந்தையிலும் பிளிப்கார்ட் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை அடைந்து வருகிறது.