டெல்லி: இந்தியாவின் 4வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் இன்று தனது 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெறும் 0.2 சதவீத லாப உயர்வை மட்டும் சந்தித்துள்ளது ஹெச்.சி.எல். மேலும் சக போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் மிகவும் குறைவான லாபத்தைப் பெற்றுள்ளது ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்.
லாபம்
இக்காலகட்டத்தில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 0.2 சதவீதம் மட்டும் உயர்ந்து 1,920 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 1,915 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இந்நிலையில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் மட்டும் 11.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 10,341 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய்
2015ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டு, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த டாலர் வருவாய் அளவுகள் 5.4 சதவீதம் குறைந்து 290.8 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
ஆனால் டாலர் வருவாய் அளவில் 5.1 சதவீதம் வரை உயர்ந்து 1.56 பில்லியன் டாலராக உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
டிசம்பர் மாத முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,03,696 ஆக உயர்ந்துள்ளது. 2வது காலாண்டில் இந்நிறுவனத்தில் தோராயமாக 6,234 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
அட்ரிஷன் விகிதம்
மேலும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற அளவு 16.7 சதவீதமாக உள்ளது. சந்தையில் உள்ள பிற இந்திய மென்பொருள் நிறுவனங்களை விடவும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
பங்குச்சந்தை
குறைவான லாபத்தைப் பெற்றுள்ள ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள் இன்று மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.28 சதவீதம் குறைவாக 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.