டெல்லி: அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை இந்தியா பெற்றுள்ளது. தாய்லாந்து அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அவர், 2015 ம் ஆண்டில் தாய்லாந்து கடந்த ஆண்டு 9.8 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது 2014ம் ஆண்டை காட்டிலும் 10.8 சதவீதம் குறைவான ஏற்றுமதி என குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2015ம் ஆண்டில் இந்தியா 10.23 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலகளவில் அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது.
2015-ம் ஆண்டில் தாய்லாந்து 98 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ததாகவும் ஆனால் இந்தியா ஒரு கோடியே 2 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ததாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அரிசித் தேவை அதிகமுள்ள நாடுகளில் நிலவிய பொருளாதார மந்தமே தங்கள் ஏற்றுமதி குறைய காரணம் என தாய்லாந்து அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 25, 30 ஆண்டுகளாக அரிசி ஏற்றுமதி யில் உலக அளவில் முதலிடத்தை தாய்லாந்து பெற்று வந்தது. 2011ஆம் ஆண்டில் 1 கோடி டன்னுக்கு அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்து தாய்லாந்து முதலிடத்தில் இருந்தது. கடந்த 2012 ம் ஆண்டு தாய்லாந்தை இந்தியா இந்த விஷயத்தில் முறியடித்து , அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்தது. ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசின் கொள்கை முடிவு தான் காரணம். கடந்த 2011 ல் அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. 4 ஆண்டாக இருந்த அரிசி ஏற்றுமதி தடையை தளர்த்தியது. பாசுமதி அல்லாத ரகங்களுக்கு அதுவரை தடை இருந்தது. இந்த தடை விலக்கிய பின், பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆக துவங்கின. இந்திய அரிசிக்கு வரவேற்பும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
2012, 2013ம் ஆண்டிலும் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் 2015ம் ஆண்டும் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.