நியூயார்க்: பங்கு மதிப்பு அடிப்படையில், அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமாக கூகுளின் ஆல்பபெட் உயர்ந்துள்ளது. கடந்த 4 வருடங்களாக டாப் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியிலுள்ள ஆப்பிள் நிறுவனத்தோடு, கூகுள் இணைந்து ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கி வந்தது. ஆனால், 2008ல் கூகுள் தனது சொந்த மொபைல் தயாரிப்பை சந்தைப்படுத்தியபோது, ஆப்பிளுடனான நட்பில் விரிசல் வந்தது.
இந்நிலையில், நியூயார்க் பங்கு சந்தையில், திங்கள்கிழமை, வர்த்தகம் முடிவடையும் வேளையில், ஆல்பபெட் நிறுவன பங்குகள் மதிப்பு 568 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. ஆப்பிளின் பங்கு மதிப்பு 535 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் இருந்தது. எனவே 4 வருடங்களாக பங்குச்சந்தை மதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்த ஆப்பிள் முதல் முறையாக பின்னுக்கு தள்ளப்பட்டு ஆல்பபெட் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் விற்பனை சீனாவில் குறைந்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் ஆப்பிள் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் கண்களுக்கு புலப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஆப்பிள் பங்கு மதிப்பு குறைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.