ஹைதராபாத்: பிற்படுத்தப்பட்ட மாணவிகள் பிளஸ் டூவிற்கு பிறகு கல்வியைத் தொடர விப்ரோ நிறுவனம் சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
விப்ரோ கன்ஸ்யூமர் கேர் விப்ரோ கேர்ஸுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்ட மாணவிகள் பிளஸ் டூவிற்கு பிறகு கல்வியைத் தொடர சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்த ஸ்காலர்ஷிப் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தூர் ஸ்காலர்ஷிப் 2016-2017ம் ஆண்டு அமலுக்கு வரும். முதல்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும்.
சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் தெலுங்கானா துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான காதியாம் ஸ்ரீஹரி, ஆந்திர மாநில சமூக மற்றும் பழங்குடியினத்தவர்கள் நலத்துறை அமைச்சர் கிஷோர் பாபு முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு டிப்ளமோ அல்லது டிகிரி படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு சந்தூர் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. ஸ்காலர்ஷிப் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை அரசு ஜூனியர் கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பெறலாம்.
சந்தூர் ஸ்காலர்ஷிப்பின்படி பெரிய நகரில் உள்ள கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.24 ஆயிரமும் வழங்கப்படும்.