சென்னை: தமிழகச் சட்டசபையில் இன்று 2016-17ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், காங்கிரஸ், இ.கம்யூ எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தாலும் பட்ஜெட் தாக்கல் முழுமையாக முடிவடைந்தது.
பொருளாதார வளர்ச்சி
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் சுமார் 8.01% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் அறிக்கையைத் துவங்கினார்.
மேலும் கடந்த ஆட்சி காலத்தில் மக்களை அதிகளவில் பாதித்த மின்வெட்டு முழுமையாக மாறி மின்மிகை மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு
2016-17ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்குச் சுமார் ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது எனவும் தனது உரையில் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இசேவை மையங்கள்
அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட இசேவை மையங்கள் உருவாக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டு நிலையில் உள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அம்மா திட்டம்
மேலும் தமிழ்நாட்டில் அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பேருந்துகள்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,510 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் குடிநீர் திட்டம்
இத்திட்டத்தின் முதல் கட்டமாகச் சென்னை பெருநகர மாநகராட்சியில் 2017ஆம் நிதியாண்டில் ஸ்மார்ட் கார்டு மூலம் அம்மா குடிநீர் திட்டம் துவங்கப்பட உள்ளது.
விற்பனை வரி
வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்த விற்பனை வரி தளர்வுகளால் அரசுக்கு ரூ4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
கடன் அளவு
அடுத்த ஆண்டுக்குள் தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ.2,47,031 கோடியாக இருக்கும் எனவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
உலக முதலீட்டாளர் மாநாடு
சில மாதங்களுக்கு முன் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ2,42,000 கோடி முதலீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இம்மாநாடு மூலம் 4.73 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் செலவினம்
தமிழக அரசுக்கு மொத்த வருவாய் வரவுகள் ரூ1,52,004.23 கோடி
மொத்த வருவாய் செலவினங்கள்- ரூ1,61,159.01 கோடி
இந்நிலையில் நிதியாண்டு வருவாய் பற்றாக்குறை 9,154.78 கோடி ரூபாயாக உள்ளது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை முடித்தார்.