சென்னை: மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிராவிடென்ட் ஃபண்ட் (provident fund) எனப்படும் சேமநல வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி உயர்வின் மூலம் சுமார் 4 கோடி பிஎஃப் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.
தற்போது நடைமுறையில் இத்திட்டத்தின் வட்டி விகிதத்தின் அளவு 8.75 சதவீதமாக இருக்கும் நிலையில் மத்திய அரசு இதன் அளவை 0.05 சதவீதம் உயர்த்தி 8.80 சதவீதமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை EPFO அமைப்பின் 211வது கூட்டத்தில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று வெளியிட்டார்.
2013-2015 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஈபிஎஃப்ஓ அமைப்பிற்கு 34,834 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 8.80 சதவீத வட்டி அளிக்கப்பட்டதன் மூலம் இவ்வமைப்பிற்குக் கூடுதலாக 673 கோடி ரூபாய் வருமான கிடைக்கும்.
ஈபிஎஃப்ஓ அமைப்பின் நிதி மற்றும் முதலீட்டுக் குழு சில மாதங்களுக்கு முன் பிஎஃப் கணக்குகளுக்கு 8.95% வட்டி விகித உயர்வைப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது அரசு வெறும் 8.80 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.