மும்பை: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்துடன் சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் வோடபோன் (Vodafone) நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்நிறுவனத்தின் வரி நிலுவை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வரி நிலுவை
வோடாபோன் செலுத்த வேண்டிய ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்து வேண்டும் என்றும் இல்லையெனில் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும் என வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஹட்கிசன்
2007-ம் ஆண்டு ஹட்கிசன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 67 சதவீத பங்குகளை வோடபோன் நிறுவனம் 11 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆனால் இதை இந்தியாவில் இல்லாத ஒரு நிறுவனத்தின் மூலம் வாங்கியது, இப்பரிமாற்றத்திற்கான ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வோடபோன்
வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து வோடபோன் நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
வோடபோன் - வருமான வரித் துறையினர்
ஹட்கிசன் நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பாக வரிநிலுவை இல்லை, காரணம் இதற்கான நடவடிக்கை இந்தியாவுக்கு வெளியே நடைபெற்றது என்று கூறுகிறது வோடபோன். ஆனால் வரிவிதிப்புத் துறையினர் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மூலம் இந்த நடவடிக்கைகளில் வோடபோன் பெரிய ஆதாயம் ஈட்டியது என்று வாதிடுகின்றனர்.
ரூ.14,200 கோடி
வோடபோன் செலுத்த வேண்டிய வரித் தொகை ரூ.7,990 கோடி தான். ஆனால் வட்டி, அபராதம் ஆகியவை சேர்ந்து மொத்தமாக ரூ.14,200 கோடி ரூபாய் அளவிற்குத் தற்போது உயர்ந்துள்ளது.