டெல்லி: பிப்ரவரி 25ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட் அறிக்கை தயாரிப்பது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இத்துறையின் முன்னாள் உயர் அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
ஏன் அப்படிச் சொல்கிறார்கள்..? வாங்க பார்ப்போம்.
சுரேஷ் பிரபு
2வது முறையாக நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் சுரேஷ் பிரபு மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க உள்ளார்.
கடந்த வருடம் இவர் தாக்கல் செய்யப் பட்ஜெட் அறிக்கையில் 2015-16ஆம் ஆண்டுக்காலத்தில் ரயில்வே துறையின் நிதிநிலை கண்டிப்பாக உயரும் எனப் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் ரயில்வே கட்டணங்களின் உயர்வு மிக முக்கியமானவை.
இந்நிலையில் கணித்தது போல் நிதிநிலை சரியாக இல்லாத காரணத்தால் 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தயாரிப்பதில் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி
கடந்த நிதியாண்டின் பயணிகள் சேவையிலும் சரி சரக்கு சேவையிலும் சரி வருமானம் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் இந்திய ரயில்வே துறை சுமார் 17,000 கோடி ரூபாய் அளவிலான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் மூலம் 32,000 கோடி ரூபாய் கூடுதலான நெருக்கடி ரயில்வே துறை சந்திக்க உள்ளது.
இதன் காரணங்களால் தான் 2016-17 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பது சுரேஷ் பிரபுவிற்குச் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கணிப்புகள்
இந்நிலையில் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சரக்குப் போக்குவரத்தை உயர்த்துவற்கும், பணிகள் சேவையை மேம்படுத்தி அதிகளவிலான பயணிகளை ஈர்க்கவும், நடைமுறை மற்றும் புதிய வர்த்தகம் வழிகளை வலுப்படுத்தும் பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இந்தப் பட்ஜெட்டில் முக்கிய இடம் பிடிக்கும்.
அதுமட்டும் அல்லாமல் பங்குதாரர்களிடம் நிலையான இணைப்பு, கட்டணங்கள் குறைப்பு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு ஆகிய நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கும்.
திட்டத் தாமதங்கள்
மேலும் இந்திய ரயில்வே துறையில் சரக்கு மற்றும் பயணிகள் சேவையை ஊக்குவிக்கும் வகையில் வகுக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படும், அதனை நிறைவேற்றுவதில் எவ்விதமான தாமதம் இருக்கக்கூடாது எனவும் ரயில்வே துறை முடிவு முடிவு செய்துள்ளது.
புதிய ரயில்கள்
செவ்வாய்க்கிழமை வரை எவ்விதமான புதிய ரயில்களையும் இந்திய ரயில்வே துறை அறிவிக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு போக்குவரத்து
ஏபரல் - ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்து 0.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் வளர்ச்சி இலக்கின் அளவு 7.7% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளர்ச்சி வித்தியாசத்தை ஈடு செய்யப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 25
இத்தகைய பெறும் சவால்களை ஈடு செய்து எப்படி நாளை பிப்ரவரி 25 தேதி எப்படி 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.
மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்துச் செய்திகளை முழுமையாவும் உடனுக்குடனும் நாளை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்க்கலாம்.