மும்பை: மத்திய அரசு வியாழக்கிழமை 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை இன்று விற்பனை செய்துள்ளனர்.
புதன்கிழமை நிலவிய அதிகளவிலான பங்கு விற்பனையால் சென்செக்ஸ் குறியீடு 320 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் உலோகம், சுகாதாரம் மற்றும் எஃப்சிஜி துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியது.
சென்செக்ஸ்
புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவை எட்டிய நிலையில், சென்செக்ஸ் குறியீடு 321.25 புள்ளிகள் சரிந்து 23,088.93 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 90.85 புள்ளிகள் சரிந்து 7,018.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.
நிறுவனங்களின் நிலை
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்தை எட்டிய நிலையில், பிற நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தை அடைந்தது.
இந்நிலையில், பெல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பு
புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.54 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.