டெல்லி: 7வது ஊதிய கமிஷனில் அறிவிக்கப்பட்டுள்ள படி 18,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பள அளவை 26,000 ரூபாயாக உயர்ந்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
26,000 ரூபாய் சம்பளம்
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (தேசிய கவுன்சில் -JCM) நடத்திய கூட்டத்தில் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள படி 18,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பள அளவுகள் அரசு ஊழியர்களால் ஏற்க முடியாது எனவே இதன் அளவை 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
அரசு எங்களது கோரிக்கையை ஏற்றுச் சம்பள அளவுகளை மாற்றி அமைக்காவிட்டால் வருகிற ஏப்ரல் 11, 2016 முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் எனவும் தேசிய கவுன்சில் -JCM கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இக்கூட்டத்தின் முடிவில் தேசிய கவுன்சில் -JCM கூட்டமைப்பு தங்களது கோரிக்கையைக் கடிதம் மூலம் அமைச்சரவை செயலாளருக்கு தெரிவித்துள்ளது.
என்பிஎஸ் (NPS)
மேலும் அரசு ஊழியர்களுக்கு என்பிஎஸ் திட்டத்தில் இருந்து விலக்கு வேண்டும் எனவும் தேசிய கவுன்சில் -JCM கூட்டமைப்பின் ஊழியர்கள் பரிவு கோரிக்கை எழுப்பியுள்ளது.
மருத்துவப் படி
அதுமட்டும் அல்லாமல் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர மருத்துவப் படி 500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனவும் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள்.