டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், டெலிகாம் துறை 18,214.32 கோடி ரூபாய்க்கு நிதிநிலை திட்டத்தைத் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது திட்டமிட்டுள்ள பட்ஜெட் தொகை சுமார் 250 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத் திட்டமாகக் கருதப்படுவது இந்திய ராணுவத்திற்கு அமைக்கப்பட உள்ள பிரத்தியேகமான நெட்வொர்க் தான். இத்திட்டம் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டை நிறைவேற்றத் தொலைத்தொடர்பு அமைச்சகம் சுமார் 8,230 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.
ராணுவத்திற்காகத் தனி நெட்வொர்க் அமைப்பதன் மூலம் மொபைல் சேவையைப் பயன்படுத்தும் நிலை ராணுவத்திற்கு இருக்காது. இதன் மூலம் இந்திய ராணுவம் மிகச்சிறப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட நிலையில் தொடர்புகளைப் பயன்படுத்தும்.
மேலும் இந்தியா கிராமங்கள் மத்தியிலான தொலைத்தொடர்பு இணைப்பைக் கொண்டு வர 7,350 கோடி ரூபாய் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் இத்திட்டத்திற்கு வெறும் 3,100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் சில முக்கியப் பகுதிகளில் பைபர் ஆப்டிக் இணைப்பைக் கொண்டு வரவும் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.