டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து 4,200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலகிலேயே 3வது மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவன தளமாக இந்தியா உருவெடுக்கும் நிலையை உருவாகியுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 85,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1200 நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் துவங்க ஏதுவான நாடாக இந்திய உருவெடுத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் இந்தியாவை மட்டும் அல்ல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களையும் அதிகளவில் கவர்ந்துள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் மட்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்றது.
மேலும் குறைந்தது 2000 நிறுவனங்கள் வென்சர் கேப்பிடல் அல்லது ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு உதவியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதில் 1,005 நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவன சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.