ஹைதராபாத்: உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான், கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சரக்குக் கிடங்கை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 3 வருடமாக இக்கிடங்கை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையை அமேசான் நிறுவனம், தெலங்கான மாநில அரசுடன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்நிறுவனம் அனைத்து விதமான ஒப்புதல்களும் கிடைத்த நிலையில் சரக்குக் கிடங்கை அமைக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கி விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
சரக்கு கிடங்கு
ஹைதராபாத்தில் இந்தப் புதிய சரக்கு கிடங்கு கச்சிபவ்லி என்ற இடத்தில் சுமார் 29 லட்சம் சதுரடியிலும், ஹைதராபாத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ஐடி ஹப்மும் அமைக்க உள்ளது.
இப்பணிகளைத் துவங்க அடுத்தச் சில வாரத்தில் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஹைதராபாத் வர உள்ளனர்.
ஐடி ஹப்
ஹைதராபாத் பகுதியில் அமைய உள்ள இப்புதிய ஐடி ஹப் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தக மேம்பாட்டிற்காக அமைக்கப்பட உள்ளது என் அமேசான் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையின் வர்த்தகத்தை இந்திய சந்தையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது அமேசான்.
முக்கிய நிறுவனங்கள்
அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகம் அமைக்கப்பட இடத்தில் மைக்ரோசாப்ட், சிஏ, இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் அடுத்தச் சில மாதங்களில் கூகிள் நிறுவனமும் இப்பகுதியில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
14,000 ஊழியர்கள்
அமேசான் நிறுவனத்தின் புதிய சரக்கு கிடங்கு மற்றும் அலுவலகம் வருகிற 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அலுவலகத்தில் சுமார் 12,000 முதல் 14,000 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம்
ஏற்கனேவே ஹைதராபாத் நகரில் மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கவும், தனது மென்பொருள் சேவையை மேம்படுத்தவும் அறிவு தேவைக்காக இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
ரூ.1,000 கோடி முதலீடு
அமேசான் தற்போது அமைத்து வரும் சரக்கு கிடங்கு மற்றும் அலுவலகத்திற்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.