டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர்ஏசியா நிறுவனத்தின் இந்திய கிளை நிர்வாகத்தில் நீடித்த முக்கிய நிர்வாகப் பிரச்சனைகளால், இந்நிறுவனத்தின் சிஇஓ மித்துச் சாண்டில்யா ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இவர் பதவிக்குத் தற்போது TUNE MONEY நிறுவனத்தின் தலைவரான அமர் அப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர் அப்ரால். ஸ்டார்ட் அப் நிறுவனமான டியூன் மணியின் சிஇஓவாக இருக்கிறார். 2013-ம் ஆண்டில் டியூன் மணியில் இணைந்தார். அதற்கு முன்பு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 19 வருடங்கள் பணியாற்றினார். ஹாங்காங், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
ஏர் ஏசியாவின் இந்திய கிளை நிறுவனத்தை ஆரம்பத்தில் இருந்து மித்துச் சாண்டில்யா சிறப்பாக நடத்தி வந்தார். சவாலான காலகட்டத்தில் பணியாற்றிய அவருக்கு இயக்குநர் குழு பாராட்டுத் தெரிவிக்கிறது என்று நிறுவனத்தின் தலைவர் எஸ்.ராமதுரை தெரிவித்தார்.
மேலும் சாண்டில்யாவுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் அப்ரால் பல வருட அனுபவம்மிக்கவர். வாடிக்கையாளர் சேவைதான் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியம், இதில் இவர் அனுபவம் மிக்கவர். ஏர் ஏசியா நிறுவனத்தின் அடுத்தக் கட்டத்துக்கு இவர் எடுத்து செல்வார் என்று நம்புகிறேன் என்று ராமதுரை கூறினார்.