பெங்களூரு: நாட்டின் புதிய மலிவு விலை விமான நிறுவனமான ஏர் பெகாசஸ், தென் இந்தியாவைக் குறிவைத்து தனது சேவையை விரிவாக்கவும், கூடுதலாகப் பல நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுக் கூடுதலாக 100 கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தென் இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏர் பெகாசஸ் நிறுவனம், கடந்த 2015ஆம் வருடத்தின் ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது.
2 விமானம், 7 நகரங்கள்..!
இந்நிறுவனத்தின் துவக்க முதலீடாக 2 ATR-72 ரக விமானங்களைக் கொண்டு தென் இந்தியாவில் கடப்பா, பெங்களூரு, ஹூப்லி, மங்களளூரு, திருவனந்தபுரம், புதுச்சேரி, சென்னை, மதுரை எனச் சுமார் 7 நகரங்களுக்கு மலிவு விலை விமானச் சேவையை அளிக்கத் துவங்கியது.
நிறுவன விரிவாக்கம்
தற்போது இந்நிறுவனத்தின் சேவையை விரிவாக்கம் செய்யவும், வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கவனத்தையும் செலுத்த ஏர் பெகாசஸ் நிர்வாகம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் நிறுவன இயக்கத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர் விருப்பம்..
நகரம் வாரியாகச் செயல்படும் ஏர் பெகாசஸ் நிறுவனத்தின் சேவை விமானப் பயணிகள் மத்தியில் நன்மதிப்பை அடைந்துள்ளதால் நிறுவனத்தைத் துவங்கிய ஒரு வருடத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
3 முறை..
உள்நாட்டு விமானப் பயணிகள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பெங்களூரு முதல் புதுச்சேரி வரையில் தினமும் 3 முறை விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் 27 முதல் கோவா பனாஜி-க்கும் 3 முறை சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
கூடிய விரைவில் கொச்சி மற்றும் விஜயவாடா-விற்குத் தனது சேவையை விரிவாக்கம் செய்ய ஏர் பெகாசஸ் திட்டமிட்டுள்ளது.
100 கோடிக்கு என்ன திட்டம்..
நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக 70 சீட்டுகள் கொண்ட 5 ATR ரக விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க உள்ளோம்.
இதன்மூலம் தென் இந்தியாவில் பிற விமானங்கள் சேவை அளிக்காத பல இடங்களுக்கு விமானச் சேவையை அளிக்க ஏர் பெகாசஸ் திட்டமிட்டுள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷைசன் தாமஸ் கூறினார்.
புதிய இடங்கள்
2016-17ஆம் நிதியாண்டில் பெங்களூரில் இருந்து பெல்காவி (கர்நாடகா), தூத்துக்குடி, ராஜ்முந்திரி மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களுக்குப் புதிய சேவையை அளிக்க ஏர் பெகாசஸ் திட்டமிட்டுள்ளது.
சென்னை டூ மதுரை
ஆந்திர பிரதேசத்தின் கடப்பாவிற்குக் குறைந்த பயணிகள் மட்டுமே வருவதால் தற்காலிமாக இவ்வழித்தடத்தில் சேவையை நிறுத்திவைத்துள்ளோம்.
ஆனால் சென்னை டூ மதுரை மற்றும் மதுரை டூ சென்னை வழித்தடத்தில் தினசரி சேவை முழுமையாக நடைபெற்று வருகிறது.
30 இல் 22க்கு அனுமதி..
தென்னிந்தியாவில் இருக்கும் 30 விமான நிலையங்களில் சுமார் 22 விமான நிலையங்களுக்குச் செல்ல ஏர்பெகாசஸ் அனுமதி பெற்றுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ
ஏர் பெகாசஸ் நிறுவனத்தின் மலிவுவிலை விமானச் சேவை தென்னிந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்ற முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தில் பாதிப்பு அடைந்துள்ளது.
இந்நிலையில் ஏர் பெகாசஸ் நிறுவனம் நிலையான வர்த்தகத்தை அடைந்தால் அடுத்த ஒரு வருடத்திற்குள் தென் இந்திய விமானச் சேவை மிகப்பெரிய இடத்தை இந்நிறுவனம் பிடிக்கும்.