பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ சக நிறுவனங்களை விடவும் மிகக் குறைவான லாப அளவைப் பதிவு செய்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டான மார்ச் 31ஆம் தேதி முடிவில் அசிம் பிரேம்ஜி தலைமை வகிக்கும் விப்ரோ நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் 1.6 சதவீதம் குறைவான லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் வெறும் 2,235 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 2,272 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 12.9 சதவீதம் உயர்ந்து 13,741.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 12,741.4 கோடி ரூபாயாக இருந்தது என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபித் அலி தெரிவித்தார்.