பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான மிந்திரா, பிளிப்கார்ட் கைப்பற்றுதலுக்குப் பின் இனி மொபைல் செயலி மூலம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கப்படும் என அறிவித்துத் தனது டெஸ்க்டாப் இணையதளச் சேவை முழுமையாக முடக்கியது.
இதனால் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிக்கும் மிந்திரா, தற்போது மீண்டும் டெஸ்க்டாப் இணையதளச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மிந்திரா
மிந்திரா நிறுவனத்தின் மொபைல் செயலி மட்டுமான வர்த்தகம், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய வேள்வியை எழுப்பியது.
ஆயினும் வாடிக்கையாளர்களை நம்பி பிளிப்கார்ட் தலைமையிலான மிந்திரா, மிகவும் நம்பிக்கையுடன் மொபைல் செயலி மட்டுமான சேவை அமலாக்கம் செய்தது.
வர்த்தகப் பாதிப்பு
மிந்திராவின் இத்தகைய முடிவு துவக்கத்தில் கணிசமான வாடிக்கையாளர்களை இழந்தாலும், பின்னாளில் வாடிக்கையாளர் இழப்பு மற்றும் வர்த்தக இழப்பு குறைந்து நிலைப்பெற்றுள்ளது எனப் பிளிப்கார்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அனந்த் நாராயன்
இந்நிலையில், தற்போது மிந்திரா நிறுவனத்தின் சீஇஓவான அனந்த் நாராயன் கூறுகையில், வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிர்வாகம் மீண்டும் டெஸ்க்டாப் இணையதளச் சேவையை வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்
இதன் மூலம் சந்தையில் நாங்கள் இழந்த அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம். மேலும் வாடிக்கையாளர்கள் இனி மொபைல் உட்பட அனைத்து அளவிலான திரைகளிலும் மிந்திரா நிறுவனத்தின் மூலம் எளிமையாக ஷாப்பிங் செய்ய முடியும் என அனந்த் நாராயன் தெரிவித்தார்.
வர்த்தகம்
மிந்திரா நிறுவனத்தின் டெஸ்க்டாப் இணையதளச் சேவை அறிமுகத்தின் மூலம் அடுத்தச் சில மாதங்களில் இந்நிறுவனம் 10-15 சதவீதம் அளவிலான வர்த்தக உயர்வை அடையும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகச் சரிவு
இந்திய ஈகாமரஸ் துறை சந்தித்து வரும் தற்போதைய இக்காட்டான சூழ்நிலையில் மிந்திரா நிறுவனத்தின் டெஸ்க்டாப் இணையதளச் சேவையின் அறிமுகம். இந்நிறுவனத்தின் வர்த்தகச் சரிவை அதிகளவில் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.