டெல்லி: ஆன்லைன் மற்றும் ரீடைல் சந்தையில் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கூலிங்கிளாஸ் விற்பனை செய்யும் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் உலக வங்கி, ரத்தன் டாடா, இன்போசிஸ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உட்படச் சில முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து சுமார் 640 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
தலைநகரம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் உலக வங்கியின் கிளை நிறுவனமான ஐஎப்சி 171 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலீட்டு ஈட்டும் முயற்சியில் இறங்கிய லென்ஸ்கார்ட் நிறுவனம், சுமார் 640 கோடி ரூபாய் வரை முதலீட்டைத் திரட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் ஐடிஜி வென்சர்ஸ், டிபிஜி குரோத் மற்றும் அட்வெக் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது.
இதனுடன் ரத்தன் டாடா மற்றும் இன்போசிஸ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
தற்போது நடைபெற்ற முதலீட்டு ஈர்ப்புச் சுற்றில் லென்ஸ்கார்ட் நிறுவனம் 640 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டைப் பலவேற்று முதலீட்டாளர் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் ஈர்த்துள்ளது.
2010ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த 2 வருடத்தில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளைச் செய்து வருகிறது. மார்ச் மாத முடிவில் லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 100 கடைகளைத் திறந்துள்ளது.
இந்நிறுவனம் நாட்டின் 65 முக்கிய நகரங்களில் 10,000க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் கூலிங்கிளாஸ்-களை விற்பனை செய்து வருகிறது.
தற்போது கிடைத்துள்ள 640 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனம் ரீடைல் கடைகள் மற்றும் உற்பத்தி தளங்களை விரிவாக்கம் செய்யவும் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.