பெங்களூரு: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மத்தியில் ஆன்லைன் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள், மோசமான வர்த்தக நிலையைச் சந்தித்து வருகிறது.
இதனை மிகப்பெரிய வாய்ப்பாகப் பயன்படுத்திய அமேசான், 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 150 சதவீதம் அதிகமான ஆர்டர்களைப் பெற்று 2015ஆம் ஆண்டை விடவும் 3 மடங்கு அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களாகக் கருதப்படும் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ஏற்கனவே பிளிப்கார்டின் மைந்திரா நிறுவனம் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெற தனது டெஸ்க்டாப் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் ஸ்னாப்டீல் பல நிறுவனங்களுடன் கூட்டணி பேசி வருகிறது.
அமித் அகர்வால்
அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், இந்தியாவில் எங்களது வர்த்தகம் நாங்கள நினைத்தை விடவும் அதிகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த ஆர்டர்கள் எண்ணிக்கையில் சுமார் 3-4 மடங்கு அளவிலான ஆர்டர்கள் அதிகரித்துள்ளது.
படம்: லைவ்மின்ட்
வளர்ச்சி
இந்நிலையில் 2016ஆம் ஆண்டின் எங்களது வர்த்தக இலக்கை எளிதாக எட்டிவிடுவோம் எனவும் அவர் அமித் கூறினார்.
போட்டி
இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க அமேசான் மட்டும் அல்லாமல் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும், பல வகையில் போட்டி போட்டு வருகிறது.
குறிப்பாகப் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பது, புதிய மார்கெட்டிங் யுக்திகள், டெலிவரி தரத்தை மேம்படுத்தல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பணமும்.. வளர்ச்சியும்..
இந்தியாவில் வர்த்தகத்தைப் பெற முடியாமல் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவை புதிய முதலீட்டை ஈர்க்கப் போராடி வருகிறது. மேலும் இரு நிறுவனங்களும் செலவின குறைப்பதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதற்கு மாறாக அமேசான் தனது வளர்ச்சிக்கு ஏற்ப முதலீட்டை அதிகரித்து வருகிறது.
6,700 கோடி ரூபாய்
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமேசான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 6,700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.