டெல்லி: இந்திய மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாக மத்திய நிதியமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் 2016ஆம் நிதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் வருமானத்தை முறையாக அரசுக்குத் தெரிவிக்காத தனிநபர் அல்லது நிறுவனங்கள் மற்றொரு வாய்ப்பாக மத்திய அரசு 'வருமான அறிவிப்புத் திட்டம் 2016' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
2016 நிதியியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது நிறுவனங்கள் 2016 மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் undisclosed income எனப்படும் அறிவிக்கப்படாத வருமானத்தை அரசுக்கு முறையாக அறிவிக்க ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி, அதனுடன் செலுத்தப்படும் வரியில் 25 சதவீதம் கிரிஷி கல்யான் செஸ், 25 சதவீதம் அபராதம் என மொத்த வருமானத்திற்கு 45 சதவீதம் அளவிலான வரியை அரசு வசூல் செய்ய உள்ளது.
உதாரணமாக 1,00,000 ரூபாய் அறிவிக்கப்படாத வருமானம் எனில் 45,000 ரூபாயை நீங்கள் அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும் இதில் அபராதமும் அடக்கம்.
ஜூன் 1, 2016 முதல் செப்டம்பர் 30, 2016 வரையிலான 4 மாத காலகட்டத்திற்கு இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இக்காலகட்டத்திற்குள் வருமானத்தை அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும், மேலும் நவம்பர் 30, 2016 தேதிக்குள் வரியைச் செலுத்தி இருக்க வேண்டும்.
மத்திய அரசு கருப்புப் பணத்தைக் களையும் விதமாகப் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே வருமான அறிவிப்புத் திட்டம் 2016 அறிவித்துள்ளது.
வரி செலுத்தப்படாத அனைத்து வகையான வருமானமும் கருப்புப் பணம் தான்.