டெல்லி: இந்தியாவில் புதிய வர்த்தகச் சந்தையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆப்பிள், இத்திட்டத்தை வலிமைபடுத்தும் வகையில் புதிய அலுவலகம், ஆப் சென்டர், புதிய முதலீடு எனப் பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் ஆப்பிள் நிறுவனத்தின் சீஇஓ டிம் குக்.
சர்வதேச சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகளவில் குறைந்த நிலையில் இந்தியாவைக் குறிவைத்துள்ள டிம் குக் இந்தியா வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக ஷாருக்கான், முதல் பல துறையில் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்களை டிம் குக் சந்தித்தார்.
முக்கியச் சந்திப்பு
நாட்டின் முன்னணி மற்றும் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசிய பகுதி தலைவர் கோபால் விட்டல் ஆகியோரை டிம் குக் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்துப் பேசினார்.
டிம் குக் இந்தியா பயணத்தில் மிக முக்கியச் சந்திப்பாக இதைப் பார்க்கப்படுகிறது.
மிட்டல் - டிம் குக்
இச்சந்திப்பில் இந்தியாவில் 4ஜி சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் HIKE மெசஞ்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கவின் பார்தி மிட்டல்-உம் கலந்துகொண்டார். கவின் HIKE மெசஞ்சர் நிறுவனத்தைப் பற்றி டிம் குக் அவர்களுக்கு முக்கிய வர்த்தக விரிவாக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
HIKE மெசஞ்சர்
உலகளவில் HIKE மெசஞ்சர், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் உட்பட லைன், வைபர் ஆகிய நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளிக்கிறது.
வர்த்தக விரிவாக்கம்
HIKE மெசஞ்சர் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது அமெரிக்கா, சீனா உட்படப் பல முக்கியச் சந்தைகளில் தனது சந்தையை விரிவாக்கம் அடைய சில முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடந்தது உறுதியாகியுள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் மற்றும் அதன் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பிற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனைக்கு முக்கிய டீலராகச் செயல்படுகிறது ஏர்டெல்.
இந்நிலையில் இந்த விற்பனையை எப்படி விரிவாக்கம் செய்ய முடியும் என்பதை ஆலோசனை செய்யவே இந்தக் கூட்டம் உருவாக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
வோடபோன்
இந்தியாவிற்கு முதல் முறையாக வந்த ஆப்பிள் சிஇஓ டிம் குக், ஏற்கனவே வோடபோன் இந்திய நிறுவனத்தின் தலைவர் சுனில் சந்தித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் தலைகள்
இந்த 3 நாட்களில் டிம் குக், ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சார், டாடா குழுமம் தலைவர் சைரஸ் மிஸ்திரி, டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ என்.சந்திரசேகரன், முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி அனந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோரைச் சந்தித்தார்.
13 % சரிவு..
ஆடம்பர சந்தையில் இருக்கும் ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யப் போராடி வந்த ஆப்பிள் நிறுவனம். 2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் விற்பனையில் 56 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் 13 வருட ஐபோன் விற்பனையில் முதல் முறையாக விற்பனை சரிவும், வருவாய் இழப்பையும் ஆப்பிள் நிறுவனம் சந்தித்துள்ளது.
தட தடவெனக் குறைந்த பங்கு மதிப்பு...
டிம் குக் தலைமையிலான ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட சில மணிநேரங்களில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 104 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனப் பங்குகள் தட தடவெனக் குறைந்து 96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
2.7 லட்சம் கோடி
இதனால் ஒரு மணி நேரப் பங்கு வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர் குறைந்தது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இதன் மதிப்பு 2,66,160 கோடி ரூபாயாகும்.
ஆப்பிள் நிறுவன வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பாக இதைப் பார்க்கப்படுகிறது.
சந்தை மதிப்பு
பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டால், இதன் மதிப்பைப் பங்குகளின் விலையைக் கொண்டு தான் சந்தையில் மதிப்பிடப்படும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் விலை 105 டாலரில் இருந்து 96 டாலராகக் குறைந்த நிலையில், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 40 பில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது.
ஆப்பிள்
அமெரிக்க எஸ் அண்டு பி 500 சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் என்எஸ்ஈ சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் ஆப்பிள் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
உலகளவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம் மிகப்பெரிய சந்தையை அடைய முடியும் எனத் திட்டமிட்டு மத்திய அரசிடம், இறக்குமதிக்கும், விற்பனைக்கும் அனுமதி கோரியது.
மத்திய அரசு
ஆப்பிள் நிறுவனத்தின் இந்தச் செயல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அளவிலான எலக்ட்ரானிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எனக் கருதி ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தம் பாதிப்பு
இந்தப் பழைய போன்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர் சந்தையை உருவாக்க முடியும் எனத் திட்டமிட்டு இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசின் மறுப்பு மிகப்பெரிய பின்னடைவு.
2வது முறை
சில ஆண்டுகளுக்கு இதேபோல் ஆப்பிள் நிறுவனம் அதே அனுமதிக்காக மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.