சென்னை: இந்தியாவில் பல முக்கியத் துறைகள் உள்ள போதிலும், 160 பில்லியன் டாலர் மதிப்புடைய ஐடி துறையில் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளம் அளிக்கப்படுகிறது. இதற்கு இத்துறையின் வர்த்தக முறையும் வாய்ப்புகளும் தான் காரணம்.
சுருக்கமாகச் சொன்னால் இன்றைய காலகட்டத்தில், புள்ள ஐடி கம்பனியிலே சேர்ந்தேலே போதும் லைப் செட்டில் ஆயிடும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அந்த அளவிற்கு ஐடி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
இப்படி மக்கள் அனைவரும் புகழ்ந்துதள்ளும் ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அது யார் வாங்குகிறார் என்று தெரியுமா..?
அபித்அலி நீமுச்வாலா
விப்ரோ நிறுவனத்தின் சீஇஓவாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அபித்அலி நீமுச்வாலா 2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 1.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒரு வருடத்திற்கு 12 கோடி ரூபாய் தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
என். சந்திரசேகரன்
நாமக்கல் மாவட்ட மோகனூரில் பிறந்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாத திகழும் டிசிஎஸ் என்னும் டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சீஇஓவாக உள்ளார்.
2015-16ஆம் நிதியாண்டில் டாடா குழுமத்தின் அக்ஷய பாத்திரமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ சந்திரசேகரனுக்கு 3.8 மில்லியன் டாலர், அதாவது 25.6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் கடந்த வருடத்தில் ஸ்பெஷல் போனஸாக 10 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாக உள்ளார்.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவன துவக்கம் முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் கையில் இருந்து இன்போசிஸ் நிர்வாகம் விஷால் சிக்கா நியமனத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது.
2014ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ பதவியில் அமர்ந்த விஷால் சிக்கா 2015-16ஆம் நிதியாண்டில் 7.45 மில்லியன் டாலர் அதாவது 49 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
பிரான்சிஸ்கோ டிசோசா
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு காக்னிசென்ட் நிறுவனம் இயங்கினாலும், இந்தியாவை மையமாகக் கொண்டே தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை அளித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் பிரான்சிஸ்கோ டிசோசா ஒரு இந்தியர். 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் செயல்படு அதிகளவிலான லாபத்தை அளித்துள்ளதால், காக்னிசென்ட் நிர்வாகம் உயர்மட்ட நிர்வாகக் குழுவிற்கு 142 சதவீதம் அளவிலான போனஸ் அளித்துள்ளது.
இதன் மூலம் காக்னிசென்ட் நிறுவனத்தின் சீஇஓ-வான பிரான்சிஸ்கோ டிசோசா 2015-16ஆம் நிதியாண்டில் 11.95 மில்லியன் டாலரைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி சம்பளம் நிறுவனத்தின் லாபத்தைப் பெருத்தது. அதாவது விப்ரோ நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 0.3 சதவீத கமிஷனாக இவர் சம்பளம் பெற்று வருகிறார். இதன்படி சில போனஸ் தொகையுடன் 2015-16ஆம் நிதியாண்டில் 3,27,993 அமெரிக்க டாலரைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
ரிஷாத் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி-யின் மகன் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரிஷாத் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் விப்ரோ குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் உள்ளார்.
2015-16ஆம் நிதியாண்டில் இவர் 3,25,462 அமெரிக்க டாலர் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
கோர்டன் கோபர்ன்
காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கோர்டன் கோபர்ன் 2015-16ஆம் நிதியாண்டில் 6.9 மில்லியன் டாலரைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
இப்போது தெரிந்ததா யார் அதிகச் சம்பளம் வாங்குகிறார் என்று..? உங்கள் சம்பளத்தையும் கூட நீங்கள் பெருமையுடன் கருத்து பதிவிடும் இடத்தில் பதிவிடலாம்.