பெங்களுரூ: சர்வதேச ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளித்து வரும் அலிபாபா, இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குவதற்காக அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறது.
கூடிய விரைவில் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் மத்தியில் வர்த்தகத்திற்காகக் குழாயடி சண்டையைப் பார்க்கலாம்.
அலிபாபாவும்.. இந்தியாவும்..
ஏற்கனவே அலிபாபா தனது இந்திய வர்த்தகத்திற்கான அடித்தளம் அமைத்துள்ள நிலையில் முறையான வர்த்தகத்தைத் துவங்குவதற்கான ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் அலிபாபா ஈட்டுப்பட்டு வருகிறது.
இந்திய நிறுவனங்கள்
சீன நிறுவனமான அலிபாபா, ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் நிறுவனங்களில் முதலீடு செய்த நிலையில், தற்போது பிளிப்கார்ட் மற்றும் டாடா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கப் போராடி வருகிறது.
இப்புதிய கூட்டணியை வலிமை சேர்க்கும் விதமாக அலிபாபா நிறுவனம் இந்தியாவில் புதிய அலுவலகத்தைத் துவங்க உள்ளது.
புதிய அலுவலகம்
கடந்த 3 மாதமாக அலிபாபா நிறுவனம் தனது நிறுவனத்திற்குத் தேவையான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வரும் நிலையில், கடந்த வாரம் பெயின் அண்ட் கோ நிறுவனத்தில் இருந்து பார்தி பாலகிருஷணன் அலிபாபாவின் இந்திய கிளை நிறுவனத்தின் பணியில் சேர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
சந்தை மற்றும் போட்டி
ஜாக் மா தலைமை விகிக்கும் இந்நிறுவனம் சர்வதேச சந்தையில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு வரும் நிலையில், ஸ்னாப்டீல் நிறுவனத்தின் வர்த்தகம் மூலமும், வேலெட் சேவைக்காகப் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா சந்தையில் நேரடியாக அலிபாபா இறங்க உள்ளது.
திட்டம்
மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலிபாபாவின் இந்திய கிளையில், இந்திய சந்தை வர்த்தகத்திற்கான ப்ளூ பிரின்ட்டை செவ்மித்ரா ஷர்மா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
ரவி சங்கர் பிரசாத்
மேலும் 2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அலிபாபா குழுமத்தின் தலைவர் மைகல் ஏவன்ஸ் மற்றும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் நிர்வாக இயக்குனர் குரு கெளரப்பன் ஆகியோர் தொலைத்தொடர்பு அமைச்சரைச் சந்தித்தனர்.