டெல்லி: 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் அளவு எதிர்பாராத வகையில் 5.76 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் வட்டி குறைப்பை நாம் எதிர்பார்க்க முடியாது.
சில்லறை பணவீக்கம்
கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் சில்லறை பணவீக்கம் 5.01 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் 5.47 சதவீதமாக இருந்தது ஆனால் 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் இதன் அளவு 5.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுதான்.
உணவுப் பொருட்கள்
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விடவும் (6.40%) மே மாதத்தில் உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கம் 7.55 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
ரிசர்வ் வங்கி இலக்கு படி 2016-17ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் நாட்டில் பதிவாகியுள்ள சராசரி அளவுகளுக்கு அதிகமான பருவ மழையின் மூலம் உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் பணவீக்கத்தில் 47 சதவீத பங்கீடு உணவு பொருட்களுக்குரியது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு
கடந்த ஒரு மாத காலத்தில் பருப்பு விலை கடந்த வருடத்தை விடவும் 31.57 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல் சர்க்கரை (13.96%) காய்கறிகள் (10.77%) விலை அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் அடுத்த வரும் மாதங்களில் நாட்டின் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் பருவ மழை ஆகியவற்றைப் பெருத்தே ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.