பெங்களுரூ: இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் 5வது இடத்தில் இருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனம் டிஜிட்டல் உருமாற்றச் சேவையில் சிறந்து விளங்கும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தி பிஐஓ ஏஜென்சி நிறுவனத்தை 45 மில்லியன் பவுண்டுக்கு (448.34 கோடி ரூபாய்) கைப்பற்றியுள்ளது.
ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறு விரும்பும் இத்தகைய சூழ்நிலையில் டெக் மஹிந்திரா நிறுவனம் நாணய பரிமாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து வெளியேற்றத்திற்கு முன்னரே பிரிட்டன் நிறுவனத்தை வளைத்துப்போட்டது.
தி பிஐஓ ஏஜென்சி
தற்போது இந்திய சந்தையிலும், பன்னாட்டுச் சந்தைகளும் டிஜிட்டல் உருமாற்றம் அதாவது Digital Transformation சேவைகளை அதிகம் நாடி வருகிறது.
இந்நிலையில் இத்துறையில் உள்ள அதிகளவிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவே முன்னாள் சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் ரீடைல், நிதியியல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் டிஜிட்டல் உருமாற்றச் சேவையில் சிறந்து விளங்கும் தி பிஐஓ ஏஜென்சி நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
45 மில்லியன் பவுண்ட்
பிரிட்டன் சந்தையில் தி பிஐஓ ஏஜென்சி நிறுவனத்தின் மதிப்பு 45 மில்லியன் பவுண்டாகக் கணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தை முழுமையாக வாங்கத் திட்டமிட்ட டெக் மஹிந்திரா மொத்த தொகையும் பணமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக இருநிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முதல் தவணை
தி பிஐஓ ஏஜென்சி நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான முதல் தவணைத் தொகையான 22 மில்லியன் பவுண்டை டெக் மஹிந்திரா அளித்துள்ளது.
இதில் உபரி தொகையாக 5 மில்லியன் பவுண்டை நிறுவனத்தின் வர்த்தக மற்றும் இதர காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்ட உள்ளதாகவும், மொத்த டீலில் மீதமுள்ள 18 மில்லியன் பவுண்டை அடுத்தடுத்த தவணையாக அளிக்க முடிவு செய்துள்ளதாக டெக் மஹிந்திரா மும்பை பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிபிஒ வர்த்தகம் இணைப்பு
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பிபிஒ வர்த்தகப் பிரிவின் 100 பங்குகளைக் கைப்பற்றும் நடவடிக்கை வருகிற ஜூலை மாத துவக்கத்தில் முழுமையாக முடிவடைய உள்ளதாகவும் டெக் மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தி பிஐஓ ஏஜென்சி வருவாய்
பிரிட்டன் சந்தையில் டிஜிட்டல் உருமாற்றச் சேவையில் சிறந்து விளங்கும் தி பிஐஓ ஏஜென்சி 2015-16ஆம் நிதியாண்டில் 12.5 மில்லியன் பவுண்ட் வருவாய் பெற்றுள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் இதன் அளவு 7.4 மில்லியன் பவுண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு
டெக் மஹிந்திரா மற்றும் தி பிஐஓ ஏஜென்சி நிறுவனங்கள் இணைப்பு குறித்து இரு நிறுவனங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இணைப்பின் மூலம் இக்கூட்டணிக்கு உலகளவில் வார்த்தக வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஸ்கோ
மேலும் இந்திய சந்தையில் இருக்கும் டிஜிட்டல் உருமாற்றச் சேவைக்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை எதிர்நோக்கி சிஸ்கோ நிறுவனம் பல மில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் தனக்கு இருப்பதாகச் சிஸ்கோ நிறுவனம் நம்புகிறது.
போட்டி
இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றச் சேவையில் ஏற்கனவே டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், பன்னாட்டு நிறுவனத் துணையோடு இச்சந்தையில் டெக் மஹிந்திரா இறங்கியுள்ளது.