பெங்களுரூ: இந்திய ஐடி நிறுவனங்கள் மென்பொருள் ஏற்றுமதியில் அதிகளவிலான சரிவை சந்தித்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இதனால் வர்த்தகத்தைச் சரிவு, வருவாய் சரிவு எனப் பல வகையில் ஐடி நிறுவனங்கள் பல பதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இத்தகையை இக்காட்டான சூழ்நிலையிலும் நிறுவனத்தின் வர்த்தகத்தை அதிகரிக்க மத்திய அரசிடம் இருக்கும் பல மென்பொருள் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் திட்டங்களை ஏற்று நடத்த ஐடி நிறுவனங்கள் தயங்குவது மட்டும் அல்லாமல் ஆர்வம் காட்டவும் மறுக்கிறது. ஏன்...?
அரசு திட்டங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் பன்னாட்டு வங்கி, அரசுகள், முன்னணி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மென்பொருள் சேவையை அளிக்கும் போது இந்திய அரசுக்குத் தேவையான மென்பொருள் சேவையை அளிக்க முடியாதா என்ன..?
கண்டிப்பாக முடியும். மத்திய அரசின் மென்பொருள் தேவையைப் பூர்த்திச் செய்வதில் அனைத்து விதமான தகுதிகளையும், தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது இந்திய நிறுவனங்கள், ஆனால் பணம்தான் இங்குப் பிரச்சனை..
பணமா..?
ஆமாங்க பணம் தான் பிரச்சனை. இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்று நடத்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு அரசு முறையான பணப் பரிவர்த்தனையைச் செய்வதில்லை. இதனால் பல மோசமான நிலைக்கு ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவை தொகை 5,000 கோடி ரூபாயாக உள்ளது என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நாஸ்காம்
இந்திய சந்தையில் தொழில்நுட்ப தேவை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 10 சதவீதம் வரை உயர உள்ளது. இதன்படி இந்திய மென்பொருள் தேவையின் சந்தை 2025ஆம் ஆண்டு 130 பில்லியன் டாலர் வரை உயரும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் வை-பை மற்றும் தேசிய ஆஃப்டிக் பைபர் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடுகள் இந்தியாவை மென்பொருள் சேவையில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் சராசரியாகத் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான செலவு செய்யப்படும் தொகை 9-11 சதவீதமாக இருக்கும், அதேபோல் மத்திய அரசின் செலவுகள் 10.5 சதவீதமாக இருக்கும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் குவிந்துள்ளது.
மைக் முதல் ஸ்டார்ட்-அப் வரை..
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ சத்ய நாடெல்லா மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இதனால் இந்தியா சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. காரணம் மைக்ரோசாப்ட், கூகிள், சிஸ்கோ போன்ற நிறுவனங்கள் போட்டியில் இருக்கும்போது சிறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் குறையும்.
சரி வாங்க இந்திய நிறுவனங்களின் கதறலை பார்ப்போம்.
ரூ.5,000 கோடி நிலுவை..
இதுவரை இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்று நடத்திய மென்பொருள் திட்டங்களுக்கு மத்திய அரசு சுமார் 5,000 கோடி ரூபாய் அளவில் நிலுவையை வைத்துள்ளது.
இதுவே ஐடி நிறுவனங்கள் அரசு திட்டங்களை ஏற்று நடத்துவதற்கு மிகப்பெரிய தடையாகவும் தயக்கமாகவும் உள்ளது என நாஸ்காம் தலைவர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
NIIT டெக்னாலஜிஸ்
மத்திய அரசின் பல திட்டங்களில் NIIT டெக்னாலஜிஸ் ஈடுப்பட்டு இருந்தது. இந்நிறுவனத்தின் தலைவர் அர்விந் தாக்கூர் கூறுகையில், அரசு திட்டங்களை ஏற்றுநடத்துவதில் நாங்கள் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தோம், இந்தச் சவால்கள் திட்டத்தை டெலிவரி செய்வதில் இல்லை, அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதில் தான் இந்தச் சிக்கல். இதனால் நிறுவனத்தின் லாப அளவுகள் அதிகளவில் குறைந்தது எனக் கூறினார்.
மைன்டுட்ரீ டெக்னாலஜிஸ்
2010ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம்படுத்துப்பட்ட ஆதார் திட்டத்தில் பணியாற்றிய மைன்டுட்ரீ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ராஸ்டவ் ராவணன் கூறுகையில், நாங்கள் ஆதார் என்னும் மிகச் சிக்கலான திட்டத்தைச் சிறப்பாக அரசுக்கு டெலிவரி செய்தோம், ஆனால் நிதி சார்ந்த வகையில் மிகவும் மோசமான அனுபவத்தைச் சந்தித்தோம் எனக் கூறினார்.
இன்போசிஸ், டிசிஸ்
இதேபோன்ற பிரச்சனைகளை இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தீர்வு
நாட்டின் அதீத வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டாலும் அதனை முழுமையாகவும் திறன்பட முடிக்கச் சரியான அமைப்பு வேண்டும்.
இதனை முறையாகத் திட்டமிட்டாலே ஐடி துறை மட்டும் அல்லாமல் அனைத்துத் துறைகளில் இருக்கும் பிரச்சனையை எளிமையாகக் களைய முடியும்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.