மும்பை: இந்தியாவில் ராக்கெட் இண்டர்நெட் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஜபாங் என்னும் ஈகாமர்ஸ் நிறுவனம் பல்வேறு காரணங்களால் தற்போது விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தை வாங்கச் சீனா அலிபாபா நிறுவனம் முதல் பிளிப்கார்ட் நிறுவனம் வரை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.
ஈகாமர்ஸ்
இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகச் சந்தையில் போட்டியின் காரணமாக முன்னணி நிறுவனங்களே அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்துக் கடுமையான பாதிப்புகளை அடைந்தது. இதில் பிளிப்கார்ட், ஸ்னப்டீல் போன்ற முன்னணி நிறுவனங்களும் அடக்கம்.
முதலீட்டாளர்கள்
ஜபாங் நிறுவனத்தின் நிறுவனரான ராக்கெட் இண்டர்நெட் மற்றும் இதன் மிகப்பெரிய முதலீட்டாளரான சுவீடன் முதலீட்டு நிறுவனம் Kinnevik ஆகிய இரண்டும் தனது வர்த்தகப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக ஜபாங் நிறுவன வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக ஜபாங் நிறுவனம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
போட்டி
இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் ஏற்கனவே போட்டி நிறைந்திருக்கும் நிலையில் இத்துறை நிறுவனங்களுக்கு ஜபாங் மிகப்பெரிய வாய்ப்பாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தை வாங்க ஆர்வும் காட்டி வருகின்றனர்.
அலிபாபா முதல் பிளிப்கார்ட் வரை
தற்போதைய போட்டில் முதல் ஆளாய் இருப்பது சீனாவின் அலிபாபா நிறுவனம் தான். ஜபாங் நிறுவனத்தை எப்படியாவது கைப்பற்றிப் பேடிஎம் துணையுடன் இந்தியாவில் தனது வர்த்தகத்தை முறையாகத் துவங்க வேண்டும் என்பதே இதன் திட்டம்.
இதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மைந்திரா, பிக் பஜார் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ப்யூச்சர் குரூப், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஈகாமர்ஸ் பிரிவு Abof, ஸ்னாப்டீல் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர்.
250-300 மில்லியன் டாலர்
ஜபாங் நிறுவனம் இன்றைய சந்தை மதிப்பில் 250-300 மில்லியன் டாலர் வரை மதிப்பிடப்படுகிறது. இந்திய ரூபாயில் இது 2016.9 கோடி ரூபாயாகும்.
விலை மிகவும் அதிகமாக இருப்பதால் ஸ்னாப்டீல் நிறுவனம் ஜபாங் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் மெத்தனம் காட்டி வருகிறது. ஆனால் பிற நிறுவனங்கள் அனைத்தும் மிகவும் ஆர்வமுடன் உள்ளது.
வருவாயில் 7% சரிவு..!
2015ஆம் ஆண்டு வர்த்தகத்தில் ஜபாங் நிறுவனம் 7 சதவீத வருவாய் சரிவை சந்தித்து 869.1 கோடி ரூபாய் என்ற குறைந்த அளவிலான வருவாய் பெற்று. இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய்க் குறைந்தாலும் நஷ்டத்தின் அளவை 159.5 கோடி ரூபாயில் இருந்து வெறும் 46.7 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
300 மில்லியன் டாலர்
தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்த ஜபாங் சில முக்கிய மாற்றங்களின் மூலம் நஷ்டத்தின் அளவை 46.7 கோடி ரூபாயாகக் குறைந்து, நிகர விற்பனை அளவு 1,503 கோடி ரூபாய் உயர்ந்தது. ஆர்டர் எண்ணிக்கையும் 54 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதிலும் கடந்த 2 காலாண்டுகளாக இந்நிறுவனத்தில் வர்த்தகம் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதனால் 100 மில்லியன் டாலராக இருந்த ஜபாங் தற்போது 300 மில்லியன் டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
டாப் 3 நிறுவனங்கள்
2015ஆம் நிதியாண்டில் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னார்டீல் ஆகிய நிறுவனங்களின் மொத்த நஷ்டத்தின் அளவு 5,052 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.