மும்பை: 2021ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐடித்துறையில் ஆட்டோமேஷன் மூலம் 6.4 லட்சம் வேலைவாய்ப்புகள் இழக்க நேரிடும் என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய ஐடித்துறை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை ஐடி துறை காணாத மறுபக்கத்தைப் பார்க்க போகிறது.
அமெரிக்க நிறுவனம்
சர்வதேச ஐடி சந்தையை ஆய்வு செய்த HFS Research நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 9 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பலிப்பைன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இன்னும் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் இந்த ஆய்வில் புதைந்துள்ளது தொடர்ந்து படியுங்கள்.
HFS Research நிறுவனம்
அடுத்த 5 வருடத்தில் ஐடித்துறையில் ஆட்டோமோஷன் ஆதிக்கத்தின் மூலம் "Low Skilled" தர வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என HFS Research நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
அதிகம் திறமைகள் தேவைப்படாத, தினந்தோறும் செய்ய வேண்டிய ஒரே வேலைகளையே நாம் Low Skilled வேலைவாய்ப்பாகக் கூறப்படுகிறது.
அதேபோல் மீடியம் ஸ்கில்டு வேலைவாய்ப்புகள் 8 சதவீதம் வரையும், ஹெய்-ஸ்கில்டு வேலைவாய்ப்புகளில் 56 சதவீதம் வரை பாதிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிபிஓ
இந்தியா நிறுவனங்களில் ஆட்டோமேஷன் செய்வதன் மூலம் அதிகளவிலான பிபிஓ வேலைவாய்ப்புகள் காற்றில் பறந்து காணாமல் போய் வருகிறது. இந்நிலையில் HFS Research நிறுவனத்தின் ஆய்வில் அடுத்த 5 வருடத்தில் 3.7 மில்லியன் பிபிஓ வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வு 1,477 ஐடித்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் மத்தியில் செய்யப்பட்டது என HFS Research நிறுவனத்தின் தலைவர் ஃபில் ஃபெர்ஸ்ட் தெரிவித்தார்.
இன்போசிஸ் பிபிஓ
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது பிபிஓ பிரிவில் ஏற்கனவே கணிசமான வேலைவாய்ப்புகளைக் குறைந்துள்ளதாக இன்போசிஸ் பிபிஓ பிரிவின் ஆசிய பசிபிக் துணைத் தலைவர் மெகஹர் தெரிவித்தார்.
டெக் மஹிந்திரா
கடந்த காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனம் ஆட்டோமேஷன் செய்யப்பட்டதன் மூலம் சுமார் 2000 வேலைவாய்ப்புகளைக் குறைத்து நிறுவன செலவில் மிகப்பெரிய தொகையைக் குறைந்துள்ளது.
டிசிஎஸ்
ஏற்கனவே 3,50,000 என்ற மிகப்பெரிய ஊழியர்கள் எண்ணிக்கையைத் தொட்ட டிசிஎஸ் 2016ஆம் நிதியாண்டில் 90,000பணியாளர்கள் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பது உறுதி செய்துள்ளது. காரணம் ஆட்டோமேஷன்.
அக்சென்சர்
இதனுடன் அக்சென்சர் நிறுவனம் இனி நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்களைச் சேர்க்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாஸ்காம்
இந்திய ஐடித்துறை அமைப்பான நாஸ்காம், இந்த ஆய்வறிக்கை குறித்து எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் புதிய டெக்னாலஜி மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொள்ளவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் ஐடித்துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு உறுதியாகிவிட்டது.
யூனியன்
இத்தகைய சூழ்நிலையில் தான் ஐடி நிறுவனங்களில் யூனியன் செயல்பட வேண்டும். குறிப்பாக நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்ற நிறுவனம் திட்டமிடும் போது யூனியன் துணை நின்று ஊழியர்களைக் காப்பாற்ற வேண்டும். நிர்வாகத்தை எதிர்த்துப் பேசாவிட்டால் பலரின் குடும்பம் கண்ணீரில் தான் மிதக்க வேண்டும்.
விர்சுஸா
தற்போது விர்சுஸா நிறுவனத்தில் பல பிரிவுகளில் இருந்து ஊழியர்களைக் காரணமில்லாமல் 2 மாத சம்பளத்துடன் வெளியேற்றி வருகின்றனர். இதற்கும் அட்டோமேஷன் தான் காரணம் என்று கருத்து நிலவி வருகிறது.
ஆட்டோமேஷன்
இக்கட்டுரைக்குப் பல எதிர்மறையான கருத்துக்கள் குவிந்தாலும் தற்போது ஆய்வின் முடிவுகள் தற்போது உண்மையான நிலையை உணர்த்தியுள்ளது. ஐடித்துறையில் ஓரே பணியில் சில வருடங்கள் மட்டுமே பணிசெய்ய முடியும். தொடர்ந்து நீங்கள் ஐடித்துறையில் வேலை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தைப் படிக்கவும், புதுமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இதற்குத் தீர்வு.